நூன்மரபு287

பொருள் : ஆதன்,  பூதன்  என்னும்  பெயர்கள்,  தந்தை  என்னும்
முறைப்பெயர்வரின்,  மேற்கூறிய  திரிபுகளொடு   நிலைமொழிப்  பெயருள்
எஞ்சி   நின்ற  ஒற்றும்,   வருமொழிமுதலிற்  றிரிந்து   நின்ற  அகரமும்
முற்றக்கெடும். பெயரொற்றும் அகரமும் என விரித்துக் கொள்க.
 

எ.டு :ஆதன் + தந்தை உ ஆத் + அந்தை உ ஆ + ந்தை = ஆந்தை
எனவரும். பூதன் + தந்தை உ பூந்தை எனவரும்.
 

ஆதன்,  பூதன்  என்பவற்றின்  முதனிலையாகிய  குறைஉரிச் சொற்கள்
ஆத்,  பூத் என்பவையாகலின்  அவை  மெலிந்து  தை என்பதனொடு கூடி
ஆந்தை, பூந்தை  என  நின்றமையறிக. இதுவும்  தொல்லோரது  வழக்காறு
நோக்கிக் கூறிய இலக்கணமே என்க.
 

‘துவர’   என்பதனான்  அழான்,   புழான்   என்பவையும் அழாந்தை,
புழாந்தை எனவருதல் கொள்க என்பார் உரையாசிரியர். அவை  சான்றோர்
வழக்காயின் புறனடையாற் கொள்ளல் தகும்.
 

சூ. 349 :

சிறப்பொடு வருவழி இயற்கை யாகும்
(54)
 

க-து :

மேற்கூறிய  இயற்பெயர்கள்   அடையொடுவரின்   இயல்பாகும்
என்கின்றது.
 

பொருள் :  மேற்கூறிய  இயற்பெயர்கள் சிறப்பாகிய அடையொடு கூடி
நின்றவழித் திரிபின்றிப் புணரும்.
 

‘இயற்கையாகும்’ எனப்  பொதுப்படக் கூறினமையின்  வருமொழியாகிய
தந்தை என்னும் சொல்லும் திரிபுறாது இயல்பாக வரும் எனக் கொள்க.
 

எ. டு:நெடுஞ்சாத்தன் தந்தை, பெருங்கொற்றன் தந்தை கருங்குழலாதன்
தந்தை, கணியன்பூதன்தந்தை, ஆதன்தந்தை, பூதன்தந்தை எனவரும்.
 

சூ. 350 :

அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும்

நிற்றலும் உரித்தே அம்மென் சாரியை

மக்கள் முறைதொகூஉம் மருங்கி னான

(55)
 

க-து :

மேற்கூறிய  இயற்பெயர்கள்  மக்கள்   முறைமைச்  சொல்லொடு
புணருமாறு கூறுகின்றது.