நூன்மரபு289

அஃதாவது தான் என்பது நெடுமுதல் குறுகியும், யான் என்பது ஆகாரம்
எகரமாய் யகரமெய் கெட்டும், நிற்கும் என்றவாறு.
 

எ. டு:  தன்கை;  என்கை, செவி, தலை, புறம் எனவரும். ஞாண், நூல்,
மணி, வட்டு, அணி என்பனவற்றொடும் கூட்டிக் கண்டுகொள்க.
 

சூ. 353 :

வேற்றுமை யல்வழிக் குறுகலும் திரிதலும்

தோற்ற மில்லை என்மனார் புலவர்

(58)
 

க-து :

மேற்கூறிய தான்யான் என்பவை அல்வழிக்கண் புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள் :  அதிகாரத்தான்  நிற்கும்  தான்யான்  என்னும்  பெயர்கள்
அல்வழியாற் புணருமிடத்து நெடுமுதல் குறுகலும் திரிதலுமின்றி இயல்பாகப்
புணரும்.
 

எ. டு:தான்   குறியன்,  சிறியன்,   தீயன், பெரியன்  எனவும்  யான்
குறியேன், சிறியேன், தீயேன், பெரியேன் எனவும் வரும்.
 

‘தோற்றம்’  என்றதனான்  - வேற்றுமைக்கண்  தற்புகழ், எற்புகழ்  என
னகரந் திரிதலும்  கொள்க  என்பார்  உரையாளர். மாட்டேறு  முதனிற்கும்
எழுத்துப் பற்றியதாகலின் னகரத் திரிபு பொதுவிதியாற் பெறப்படுமென்க.
 

சூ. 354 :

அழன்என் இறுதிகெட வல்லெழுத்து மிகுமே
(59)
 

க-து :

அழன் என்னும் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் அழன் என்னும்  சொல்லிறுதி னகரஒற்றுக்கெட வருமொழி
வல்லெழுத்துமிக்குப் புணரும்.
 

எ.டு :அழக்குடம், சாடி, தூதை, பானை எனவரும்.  உருபுபுணர்ச்சிக்கு
ஓதியாங்கு   அத்துச்சாரியை   பெறுமோ   என   வரும்   ஐயம்  நீங்க
வல்லெழுத்துமிகும் என்றார்.
 

சூ. 355 :

முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும்

இல்லென் கிளவிமிசை றகரம் ஒற்றல்

தொல்லியல் மருங்கின் மரீஇய மரபே

(60)
 

க-து :

முன்றில் என்னும் சொல் இலக்கணமரூஉவாய் வருமென்கின்றது.
 

பொருள் :  முன்   என்னும்  சொற்கு  முன்னர்வரும்  இல்  என்னும்
சொல்லுக்கு  மேல் ஒரு  றகர ஒற்றுத் தோன்றி நிற்றல் பழைய இயல்பினை
உடைய வழக்கின்கண் மருவி வந்த மரபாகும்.