நச்சினார்க்கினியர் வரலாறு
 

செந்தமிழ்ப்    புலமையிற்   சிறந்து   விளங்கிய   உரையாசிரியராகிய
நச்சினார்க்கினியர் பாண்டிவள நாட்டிலே மதுராபுரியிலே பிறந்தவர். அஃது,
"கரைபெற்றதோர்  பஞ்சலட்சணமான"  என்னும்  பாண்டி  மண்டல சதகச்
செய்யுளானும், "வண்டிமிர்  சோலை மதுரா புரிதனி - லெண்டிசை விளங்க
வந்த வாசான்" என்னும் உரைப்பாயிரச் செய்யுளடிகளானுந் தெளிவாகும்.
 

இவர்  பாரத்துவாச  கோத்திரத்தவர். பார்ப்பன மரபினர். அஃது, இவர்
எழுதிய    உரைகளின்   இறுதியில்,   "பாரத்துவாசி   நச்சினார்க்கினியர்
செய்தவுரை முற்றிற்று"  எனக் கூறப்படலானும், "மதுரை நச்சினார்க்கினியன்
மாமறையோன்" என்னும் உரைப்பாயிரச் செய்யுட்பகுதியானும் உணரப்படும்.
 

இவர்     சமயம்     சைவமாகும்.     "ஓரெழுத்     தொருமொழி"
(தொல் -  மொழிமரபு - கஉ)      என்னுஞ்     சூத்திர     வுரைக்கண்,
"திருச்சிற்றம்பலம்,"   "பெரும்பற்றப்புலியூர்"  என்னுஞ்  சிவஸ்தலங்களின்
பெயரைக்     குறிப்பிடலானும்,    தம்    முரையகத்துத்    திருவாசகம்,
திருக்கோவையார் முதலிய சைவ நூல்களிலிருந்து மேற்கோள் காட்டலானும்,
திருமுருகாற்றுப்படை   யுரையகத்துக்   கூறிய   சிலபகுதிகளானும்   அது
துணிதலாகும்.
 

இவர்  தந்தையார்  பெயர்  இதுவெனத்  துணிதற்குத்  தக்க  ஆதாரம்
யாதுமில்லை.
 

இவர்    பெயர்    நச்சினார்க்கினியர்    என்பதாகும்.   அது   சிவ
பெருமானுக்குரிய   திருநாமங்களு   ளொன்றாகக்   கருதப்படுகிறது.  அக்
கூற்றிற்கு,     "இச்சையான்     மலர்க    டூவி    யிரவொடு    பகலுந்
தம்மை   -  நச்சுவார்க்   கினியர்    போலு    நாகவீச்    சுரவனாரே"
(திருநா-திருநாகேச்சுரம்-தே.)  "நச்சினார்க்  கினியாய்  போற்றி யெனத்துதி
நவிலுங் காலை" (காஞ்சிபுராணம்-சத்ததனா-16) என்பன வாதாரமாம்.
 

இவர் தமிழ் மொழியை நன்கு கற்றுத்தேறிப் புலமை வாய்க்கப்பெற்றவர்.
இலக்கண   விலக்கியங்களிலன்றி  யேனைய  கலைகளிலும்  நிரம்பியவறிவு
படைத்தவர்.   ஆரியமொழிப்  பயிற்சியுமுடையவர்.  அது,  தொல்காப்பிய
முதலியவற்றிற்கு   இவர்   எழுதிய  வுரைகளிடையே  ஏனைக்  கலைகள்
சம்பந்தமாக வரும்