132புணரியல்

125.

அத்தி னகர மகரமுனை யில்லை.
 

இஃது அத்து முதல் திரியுமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள்: அத்தின்  அகரம்  - அத்துச்சாரியையின்   அகரம்,
அகரமுனை   இல்லை - அகர   ஈற்றுச்   சொன்முன்னர்    இல்லையாம்
என்றவாறு.
 

'அத்தவண்   வரினும் வரைநிலை  யின்றே'  (எழு - 219) என்பதனான்
மகப்பெயர்   அத்துப்பெற்று   நின்றது.  மகத்துக்கையென  அகரங்கெட்டு
நின்றது.  விளவத்துக்கண்ணென்  புழிக்  கெடாதுநிற்றல்  'அத்தே  வற்றே'
(எழு - 133) என்பதனுள் 'தெற்றென் றற்றே' என்பதனாற் கூறுப.
  

(23)
 

126.

இக்கி னிகர மிகரமுனை யற்றே.
 

இஃது இக்கு முதல் திரியுமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள்: இக்கின்  இகரம்  -  இக்குச்  சாரியையினது இகரம்,
இகரமுனை அற்று - இகரஈற்றுச்சொன் முன்னர் முற்கூறிய  அத்துப்போலக்
கெடும் என்றவாறு.
 

'திங்கண்   முன்வரின்'    (எழு - 248)   என்பதனாற்பெற்ற    இக்கு
ஆடிக்குக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என  இகரங்கெட்டு
நின்றது. இஃது இடப்பொருட்டு.
 

(24)
 

127.

ஐயின் முன்னரு மவ்விய னிலையும்.
 

இதுவும் அது.
 

இதன் பொருள்: ஐயின்  முன்னரும்  அவ்வியல் நிலையும் - இக்கின்
இகரம் இகர ஈற்றுச்  சொன்முன்னரன்றி  ஐகார  ஈற்றுச்  சொன்முன்னரும்
மேற்கூறிய கெடுதலியல்பிலே நிற்கும் என்றவாறு.
 

'திங்களு  நாளு  முந்துகிளந்   தன்ன'    (எழு - 286)   என்பதனாற்
சித்திரைக்குக் கொண்டான் என்புழிப்பெற்ற  இக்கு  ஐகாரத்தின்  முன்னர்க்
கெட்டவாறு காண்க.
 

(25)