பகுதிகட்கு  எழுதியுள்ள விசேட வுரைகளானும், இன்னும் அவ் வுரையகத்து
வேதவே   தாங்கங்களிலிருந்து   பல  பொருள்களை  யெடுத்துக் காட்டிச்
சேறலானும்  நன்கு  தெளிவாகும். இவரைக் கற்பித்த வாசிரியர் யாவரெனத்
தெரிந்துகொள்ள முடியவில்லை.
 

இவர்  புதுவதாகத்  தாமோர்  நூலியற்றி  யிருப்பதாகத் தெரியவில்லை.
இவரின்    வாணாள்    முழுவதும்    பண்டைத்    தமிழ்    நூல்கட்கு
உரையெழுதுவதிலேயே      கழிவதாயிற்று.     இவராலுரைகாணப்பட்டன
தொல்காப்பியம்,     பத்துப்பாட்டு,     கலித்தொகை,    சீவகசிந்தாமணி,
குறுந்தொகை    யிருபதுசெய்யுள்   என்பனவாம்.   அது,   "பாரத்தொல்
காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியு-மாரக் குறுந்தொகையு ளைஞ்ஞான்குஞ் -
சாரத் - திருத்தகு  மாமுனிசெய் சிந்தா மணியும்-விருத்திநச்சி னார்க் கினிய
மே" என்னு முரைப்பாயிரச் செய்யுளா லறியலாகும்.
 

இவர்   பதசார   மெழுதுவதினும்,  முடிபு  காட்டுவதினும்,  விளங்காத
பகுதிகளை   நன்கு  விளக்குவதினும்,  போதிய  மேற்கோள்களை  யெடுத்
தாளுவதினும்,    நூலாசிரியரின்  கருத்தை  யுணர்ந்து  உரைகாண்டலினும்
ஏனை   யுரையாசிரியர்களைக்   காட்டினும்   மிக்க  திறைமைபடைத்தவர்.
உரை  யெழுதுவதில் இவரை வடமொழிப் புலவராகிய மல்லிநா தசூரியோடு
ஒப்பிட்டுக் கூறுவது மிகவும் பொருத்தமாகும்.
 

இவர்     காலம்   கி.  பி.    ஒன்பதாம்   நூற்றாண்டாகும்.   அது,
நச்சினார்க்கினியருரையகத்துப்   பேராசிரியர்   கூற்றை   மறுக்கும்  பகுதி
காணப்படலானும்,   பேராசிரிய   ருரையகத்து   திருநாவுக்  கரசுநாயனார்
தேவாரமொன்று  மேற்கோளாகக்  காணப்படலானும், நாயனார் காலம் கி.பி.
ஏழாம்      நூற்றாண்டின்      பிற்பகுதியெனச்      சிலாசாஸனங்களாற்
றுணியப்பட்டிருத்தலானும், திருமுருகாற்றுப்படை திருமுறைகளு ளொன்றாகச்
சேர்க்கப்   பெற்ற   காலம்  கி. பி.  பத்தாம்  நூற்றண்டின்  நடுப்பகுதியா
மாகலானும்,   அந்  நூலுரையகத்து  இவ்  விசேட  செய்தி  யாதொன்றுங்
கூறப்படாமையானும்   எட்டாம்   நூற்றண்டிற்கும்  பத்தாம்  நூற்றண்டிற்கு
மிடைப்பட்டகாலமே    இவர்காலமாதல்    கூடுமெனக்    கருதப்படலானு
மொருவாறு புலனாகும்.