உருபியல்185

192.

தான்யா னென்னு மாயீ ரிறுதியு
மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே.

  

இது னகர ஈற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் தான் யான் என்னும் ஆயீ ரிறுதியும் - தான் யான்
என்று சொல்லப்பட்ட  அவ்விரண்டு னகர  ஈறும், மேல்  முப்பெயரொடும்
வேறுபாடு   இலவே -  மேல்   மகர  ஈற்றுட்  கூறிய மூன்றுபெயரோடும்
வேறுபாடின்றித்   தானென்பது  குறுகியும்   யானென்பதன்கண்  ஆகாரம்
எகாரமாய் யகர வொற்றுக் கெட்டும் முடியும் என்றவாறு.
 

தன்னை என்னை  என  எல்லாவுருபோடும்  ஒட்டுக.  செய்கை யறிந்து
ஒற்றிரட்டுதல் 'நெடியதன் முன்னர்' என்பதனுள் இலேசாற் கொள்க.
  

(20)
 

193.

அழனே புழனே யாயிரு மொழிக்கு
மத்து மின்னு முறழத் தோன்ற
லொத்த தென்ப வுணரு மோரே.

 

இதுவும் அது.
 

இதன் பொருள் அழனே புழனே  ஆயிரு மொழிக்கும்  -  அழன்
புழன் ஆகிய அவ்விரு  மொழிக்கும்,  அத்தும் இன்னும் உறழத் தோன்றல்
ஒத்ததென்ப   -   அத்துச்சாரியையும்    இன்    சாரியையும்  மாறிவரத்
தோன்றுதலைப்    பொருந்திற்றென்பர்,   உணருமோர்   -    அறிவோர்
என்றவாறு.
 

அழத்தை   அழனினை,  புழத்தை  புழனினை  எனச்  செய்கையறிந்து
எல்லாவுருபினோடும்  ஒட்டுக.  னகரத்தை  அத்தின்  மிசை   ஒற்றென்று
கெடுத்து  'அத்தி  னகரம்'  (எழு - 125) என்பதனான்   முடிக்க. 1தோன்ற
லென்றதனான்  எவன் என  நிறுத்தி வற்றுக்கொடுத்து  வேண்டுஞ்செய்கை
செய்து எவற்றை எவற்றொடு என முடிக்க. எல்லாவுருபினோடும் ஒட்டுக.


1. இச் சூத்திரத்தால்  எவன் என்பதற்கு  வற்றுக் கொடுத்து, வற்றுமிசை
யொற்றென்று னகரங்  கெடுத்து 'வஃகான்  மெய்கெட' என்னுஞ் சூத்திரத்து
'ஆகியபண்பு' என்றமையால் ஐகாரத்தின்  முன்னன்றி, அகரத்தின் முன்னும்
வற்றின்  வகரங்  கெடுமென  வகர  அகரத்தைக்  கெடுத்து எவற்றை என
முடிக்க