பலா அவிலை பலா அநார் என இயல்புகணத்துங் கொள்க. அறிய என்றதனான் அவ்வகரம் ஈரிடத்தும் பொருந்தினவழிக் கொள்க. |
இன்னும் இதனானே அண்ணாஅத்தேரி திட்டாஅத்துக்குளம் என அத்துக்கொடுத்தும், உவாஅத்து ஞான்று கொண்டான் என அத்தும் ஞான்றும் கொடுத்தும், உவாஅத்தாற் கொண்டான் என அத்தும் ஆனுங் கொடுத்தும் 1இடாஅவினுட் கொண்டான் என இன்னும் ஏழனுருபுங் கொடுத்துஞ் செய்கைசெய்து முடிக்க. |
இன்னும் இதனானே மூங்காவின்கால் மூங்காவின்றலை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்துக் கேடுங் கொள்க. |
(24) |
227. | இராவென் கிளவிக் ககர மில்லை. |
|
இஃது ஆகார ஈற்றுப்பெயர்க்கு ஒருவழி எய்தியது விலக்குகின்றது. |
இதன் பொருள்: இராவென் கிளவிக்கு - இராவென்னும் ஆகார ஈற்றுச் சொல்லிற்கு, அகரம்இல்லை - முற்கூறிய அகரம் பெறுதலின்றி வல்லெழுத்துப்பெற்று முடியும் என்றவாறு. |
உதாரணம் : இராக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். 2இரா அக்காக்கை இராஅக்கூத்து எனப் பெயரெச்சமறைப்பொருள் தாராது இராவிடத்துக் காக்கை இராவிடத்துக் கூத்து என வேற்றுமை கருதியவழி இராக்காக்கை இராக்கூத்து என அகரம் பெறாதென்று உணர்க. |
(25) |
228. | நிலாவென் கிளவி யத்தொடு சிவணும். |
|
இஃது அகரம் விலக்கி அதிகார வல்லெழுத்தினோடு அத்துவகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. |
இதன் பொருள் :நிலாவென் கிளவி அத்தொடு சிவணும் - நிலா வென்னுஞ் சொல் அத்துச்சாரியையோடு பொருந்தி முடியும் என்றவாறு. |
|
1. இடாஅ - இறைகூடை. |
2. இராஅக்காக்கை - இராதகாக்கை. இராவிடத்துக் காக்கை எனின் அகரம் பெறாது இராக்காக்கை என வரும். ஏனையவுமன்ன. |