புள்ளிமயங்கியல்247

8. புள்ளிமயங்கியல்
 

296.

ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்ன
ரல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே
யுகரம் வருத லாவயி னான.

 

என்பது சூத்திரம்.
 

நிறுத்த முறையானே உயிரீறு புணர்த்துப்  புள்ளியீறு வன்கணத்தோடுஞ்
சிறுபான்மை  ஏனைக் கணத்தோடும்  புணருமாறு கூறலின் இவ் வோத்துப்
புள்ளிமயங்கிய லென்னும் பெயர்த்தாயிற்று.
 

இச் சூத்திரம்  ஞகார  ஈறு  வன்கணத்தோடு  இருவழியும்  புணருமாறு
கூறுகின்றது.
 

இதன்பொருள் :ஞகாரை  ஒற்றிய  தொழிற்பெயர் முன்னர் - ஞகாரம்
ஈற்றின்கண் ஒன்றாகநின்ற  தொழிற்பெயரின் முன்னர், அல்லது கிளப்பினும்
வேற்றுமைக்கண்ணும்  -  அல்வழியைச்  சொல்லுமிடத்தும் வேற்றுமையைச்
சொல்லுமிடத்தும்,   வல்லெழுத்து   இயையின்  அவ்வெழுத்து  மிகும்  -
வல்லெழுத்து முதன்மொழி   வருமொழியாய்  வரின்  அவ்  வல்லெழுத்து
வருமொழிக்கண்  மிக்கு   முடியும்,  ஆவயின்  ஆன  உகரம்  வருதல் -
அவ்விடத்து உகரம் வரும் என்றவாறு.
 

உதாரணம் :உரிஞுக்கடிது சிறிது தீது பெரிது எனவும்,  உரிஞுக்கடுமை
சிறுமை தீமை பெருமை எனவும் வரும்.
 

(1)
 

297.

ஞநமவ வியையினு முகர நிலையும்.
 

இஃது  அவ்  வீறு  மென்கணத்தோடும்  இடைக்கணத்து வகரத்தோடும்
முடியுமென எய்தாத தெய்துவித்தது.
 

இதன் பொருள் :ஞநமவ இயையினும் உகரம் நிலையும் - அஞ் ஞகர
ஈறு   வன்கணமன்றி   ஞநமவ  முதன்மொழி   வருமொழியாய்   வரினும்
நிலைமொழிக்கண் உகரம் நிலைபெற்று முடியும் என்றவாறு.