262 புள்ளிமயங்கியல்

318.

அடையொடு தோன்றினு மதனோ ரற்றே.
 

இஃது 'அடையொடு தோன்றினும்  புணர்நிலைக்  குரிய' (எழு  -  110)
என்றமையின் அவ் வெண்ணுப் பெயரை அடையடுத்து முடிக்கின்றது.
 

இதன் பொருள்:  அடையொடு  தோன்றினும் - அவ்வாயிரமென்னும்
எண்ணுப்பெயர்   அடையடுத்த   மொழியோடுவரினும்,   அதனோரற்று -
முற்கூறியதனோடு ஒருதன்மைத்தாய் அத்துப்பெற்று முடியும் என்றவாறு.
 

உதாரணம் :பதினாயிரத்தொன்று   இரண்டு  இருபதினாயிரத்தொன்று
ஆறாயிரத்தொன்று       நூறாயிரத்தொன்று       முந்நூறாயிரத்தொன்று
ஐந்நூறாயிரத்தொன்று என ஒட்டுக. முன்னர் இலேசினான் முடிந்தவற்றையும்
அடையடுத்து   ஒட்டுக.  பதினாயிரத்துக்குறை புறம்  கூறு முதல் எனவும்,
நூறாயிரப்பத்து எனவும் வரும்.
 

(23)
 

319.

அளவு நிறையும் வேற்றுமை யியல.
 

இஃது அவ் வெண்ணின்  முன்னர் அளவுப் பெயரும்  நிறைப் பெயரும்
வந்தால் முடியுமாறு கூறுதலின் எய்தாததெய்துவித்தது.
 

இதன் பொருள் :அளவும் நிறையும் - அதிகாரத்தால் ஆயிரந் தானே
நின்றுழியும்  அடையடுத்து  நின்றுழியும்  அளவுப்பெயரும் நிறைப்பெயரும்
வந்தால்,  வேற்றுமை   இயல  -  மகர  ஈற்று   வேற்றுமையோடு  ஒத்து
வல்லெழுத்து வந்துழி  மகரங்கெட்டு  வல்லெழுத்து மிக்கும்  இயல்புகணம்
வந்துழித்  'துவர' (எழு - 310)   என்னும்   இலேசான்   எய்திய  மகரங்
கெட்டும் புணரும் என்றவாறு.
 

உதாரணம் : ஆயிரம்  பதினாயிரம்  நூறாயிரம்  என நிறுத்திக் கலம்
சாடி தூதை பானை நாழி  மண்டை வட்டில் அகல் உழக்கு  எனவும், கஃசு
கழஞ்சு தொடி துலாம் பலம் எனவுந் தந்து ஒட்டுக.
 

வேற்றுமையியல எனவே தாம் வேற்றுமை யல்லவாயின. 
  

(24)