312குற்றியலுகரப்புணரியல்

9. குற்றியலுகரப் புணரியல்
 

406.

ஈரெழுத் தொருமொழி யுயிர்த்தொட ரிடைத்தொட
ராய்தத்தொடர்மொழி வன்றொடர்மென்றொட
ராயிரு மூன்றே யுகரங் குறுகிடன்.

 

என்பது   சூத்திரம்.   இவ்   வோத்துக்  குற்றியலுகரமென்று   கூறப்பட்ட
எழுத்துப் பொருட்பெயரோடும் எண்ணுப்பெயர் முதலியவற்றோடும் புணரும்
முறைமை    உணர்த்தினமையிற்     குற்றியலுகரப்     புணரியலென்னும்
பெயர்த்தாயிற்று.   இது   'மெய்யே   யுயிரென்  றாயீ ரியல' (எழு - 103)
என்றவற்றுள்      உயிரினது       விகாரமாய்நின்ற       குற்றுகரத்தை
இருமொழிக்கண்ணும்    புணர்க்கின்றமையின்     மேலை    ஓத்தினோடு
இயைபுடைத்தாயிற்று.  இத்தலைச்  சூத்திரம்  மொழிமரபினகத்து இருவழிய
என்ற  குற்றுகரம்   இதனகத்து   இனைத்து   மொழியிறுதி   வருமென்று
அவற்றிற்குப்   பெயரும்   முறையும்    தொகையும்    உணர்த்துகின்றது.
அப்பெயர்பெயர்,   அம்முறைமுறை,  அத்தொகைதொகை.  'தொடர்மொழி
யீற்று'   (எழு -  36)   வருமென்று  ஆண்டுக்   கூறியவதனை   ஈண்டு
ஐந்துவகைப்படுத்தி அதனோடு 'நெட்டெழுத் திம்பரும்' (எழு - 36) என்றது
ஒன்றேயாதலின் அதனையுங் கூட்டி அறுவகைத்தென்றார்.
 

இதன் பொருள் : ஈரெழுத்  தொருமொழி  -  இரண்டெழுத்தானாகிய
ஒருமொழியும், உயிர்த்தொடர் -  உயிர்மேல்வரும்  மெய்யைத்  தொடர்ந்து
நின்ற  சொல்லும்,  இடைத்தொடர் - இடையொற்று மேல்வரும் மெய்யைத்
தொடர்ந்து  நின்ற  சொல்லும்,  ஆய்தத்  தொடர்மொழி  -  ஆய்தமாகிய
எழுத்து  மேல்வரும் மெய்யைத் தொடர்ந்துநின்ற சொல்லும், வன்றொடர் -
வல்லொற்று  மேல்வரும்   மெய்யைத்   தொடர்ந்து   நின்ற   சொல்லும்,
மென்றொடர் - மெல்லொற்று  மேல்வரும்  மெய்யைத்  தொடர்ந்து  நின்ற
சொல்லும், ஆயிருமூன்றே - ஆகிய  அவ் வாறுசொல்லுமே, உகரங் குறுகு
இடன் - குற்றியலுகரங் குறுகிவரும் இடன் என்றவாறு.
 

உதாரணம் : நாகு,  வரகு,  தெள்கு,  எஃகு,  கொக்கு,  குரங்கு  என
வரும்.