447. | மூன்ற னொற்றே வந்த தொக்கும். |
| |
இது மேல் மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : மூன்றனொற்றே வந்ததொக்கும் - மூன்றாமெண்ணின்கணின்ற னகர ஒற்று வருமொழியாய் வந்த அளவுப்பெயர் நிறைப்பெயர்களின் முன்னர் வந்த வல்லொற்றோடு ஒத்த ஒற்றாய்த் திரிந்து முடியும் என்றவாறு. |
உதாரணம் : முக்கலம் சாடி தூதை பானை எனவும், முக்கழஞ்சு கஃசு தொடி பலம் எனவும் வரும். |
'நான்க னொற்றே றகார மாகும்' (எழு - 442) என்ற முன்னை மாட்டேறு நிற்றலின் நாற்கலம் சாடி தூதை பானை எனவும், நாற்கழஞ்சு தொடி பலம் எனவும் வரும். |
(42) |
448. | ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும். |
| |
இதுவும் அது. |
இதன் பொருள் : ஐந்தனொற்றே மெல்லெழுத்தாகும் - ஐந்தாவதன்கண் நின்ற நகர ஒற்று வருமொழி வல்லெழுத்துக்கு ஏற்ற மெல்லெழுத்தாகத் திரிந்து முடியும் என்றவாறு. |
உதாரணம் : ஐங்கலம் சாடி தூதை பானை எனவும், ஐங்கழஞ்சு தொடி பலம் எனவும் வரும். ஏகாரம் ஈற்றசை. |
(43) |
449. | கசதப முதன்மொழி வரூஉங் காலை. |
| |
இது முற்கூறிய மூன்றற்கும் ஐந்தற்கும் வருமொழி வரையறுக்கின்றது. |
இதன் பொருள் : கசதப முதன்மொழி வரூஉங் காலை - மூன்றனொற்று வந்ததொப்பதூஉம் ஐந்தனொற்று மெல்லெழுத்தாவதூஉம் அவ்வளவுப்பெயர் ஒன்பதினும் வன்கணமாகிய கசதபக்கள் முதன்மொழியாய் வந்த இடத்து என்றவாறு. |