கற்கும் மாணாக்கர்களோடுங்கூடி அவர்களையங்களை நீக்கிக் கல்வியில் அவர்களைப் பாதுகாத்தலுடையவன் என்றபடி. |
ஆனேறு : ஆனேறு காட்டுள் மேய்வுழி அங்குத் தோன்றிய வொலியை இன்னதனொலி இதுவென வோர்ந்து அதன் நன்மை தீமைகளை நிச்சயித் தறிதல்போல, மாணாக்கனும் ஆசிரியன் கூறிய சொற்பொருள்களை ஆராய்ந்து அப்பொருள்களின் குணாகுணங்களை நிச்சயித்தறிவன் என்றபடி. |
குரங்கெறி விளங்காயாவது:- குரங்குக்குக் கல்லெறிந்து தான் கருதிய விளங்காயைப் பெற்றுக்கொள்வோனுடைய அவ்வியல்பு. அதுபோலக் கடைமாணாக்கனும் ஆசிரியனிடம் வழிபட்டு முறைப்படி கேளாமற் சில கடாக்களை நிகழ்த்தித் தான் கருதிய பொருளைப் பெற்றுக்கொள்வன் என்றபடி. |
எறிவிளங்கா யென்பது எறிந்து விளங்காயைக் கொள்பவன் எனக் கொள்பவன்மேல் நின்றது. இக்கருத்தை விளக்கவே, 'கல்லால் எறிந்து கருதுபயன் கொள்வோன் குரங்கெறி விளங்கா யாமென மொழிப' எனக் கூறினார். இங்கே "கல்லா லெறிந்து கருதுபயன் கொள்வோன்" என்பது கல்லாலெறிந்து தான் கருதிய பயனாகிய விளங்காயைக் கொள்பவனென அவனை யுணர்த்தலோடு உடம்பொடு புணர்த்தலால் அவன் றன்மையையு முணர்த்தி நின்றது. நிற்கவே அவன் றன்மையாவது கல்லாலெறிந்து கருது பயன் கோடல் என்பது பெறப்படும். கல்லாலெறிந்து கருது பயன் கோடலே கொள்பவனுடைய இயல்பு. |
காரா - எருமை. அதனியல்பாவது : பெருகிவரும் நீரிலே அதனைத் தடுத்து வீழ்ந்து அந்நீரை யுழக்கிக் கலக்கி உண்ணுதலாம். அதுபோலக் கடைமாணாக்கனும் ஆசிரியனைச் சொல்லவிடாது தடுத்து அவனுடைய அறிவைத் தர்க்கித்துக் கலக்கி யறிவன் என்றபடி. அருந்தல் காராமேற்று என முடிக்க. அருந்தல் - அருந்துமியல்பு. ஆட்டின்சீர் - ஆட்டின்றன்மை. ஆரஉறினும் - நிறையப் பொருந்தினாலும். குளகு ' விலங்கிற்குரிய உணவு. |
தோணி நீரிடையின்றி நிலத்திற் செல்லமாட்டாததுபோலக் கடை மாணாக்கனும் தான் பயின்ற நூலினன்றிப் பயிலாத நூலின் கட் செல்லமாட்டான். களம் - கலாசாலை. |
முன்னும் பின்னும் அகலானாகி என்றது ஆசிரிய னிருக்கும் போது அவன் முன்னிடத்தையும் செல்லும்போது அவன் பின்னிடத்தையும் அகலானாகிப் படித்தலை. ஆசு - குற்றம். என்றது ஐயந்திரிபுகளை. எத்திறம் - எவ்வகையான வழிபாடு. அத்திறம் - அவ்வகையான வழிபாடு. அறத்திற் றிரியாப் படர்ச்சி - அற நூலிற் சொன்ன முறையிற் றவறாத வழிபாட்டொழுக்கம். வழிபாடு - எழுவாய். படர்ச்சி - பயனிலை. வழக்கு - உலகவழக்கு. அவை யென்றது - முன்கேட்கப்பட்டவற்றை. அமைவரக்கேட்டல் - மனத்தில் நன்றாய்ப் படியக்கேட்டல். அனையன் அல்லோன் - மாணாக்கனுக்குரிய இலக்கண மில்லாதவன். வினையினுழப்பொடு - கற்றற் |