22சிறப்புப்பாயிரம்

கண்ணதே   வடிவமாகலின்   செறித்தல்  (உட்புகுத்தல்)  என்ற சொல்லே
குழலுங்   குடமும்   போல்வனவற்றை   உணர்த்தும்   என்க. அன்றியும்
இடையென்பது   வெளியிடத்தை   உணர்த்தலானும்  முன்னையவிரண்டும்
வெளியிடமல்லாத       குழலுங்       குடமும்      போல்வனற்றையே
உணர்த்திவந்தனவென்பது   துணிபாகும்.   நூலாசிரிய  உரையாசிரியர்கள்
கருத்துக்களைப்  பின்முன்  நோக்கிக்கொள்ளும்  பொருளே பொருத்தமாம்
என்க. குழல் குடம் போல்வனவற்றில் வைத்து உருவு வடிவுகளை விளக்கின்
மாணாக்கர்க்கு அவை இனிது விளங்குமென்பது கருதியே  அவற்றை ஈண்டு
நச்சினார்க்கினியர்   எடுத்துக்காட்டினார்   என்க.  சிறுவர்  நீண்ட  குழல்
முதலியவற்றுட் பேசும் வழக்கம் இக்காலத்தும் உண்டு.
 

இடையெறியப்படுதலானும்     என்பதில்  இடையென்பது    இடத்தை
யுணர்த்திநின்றது.  இடம்  ஈண்டு  வெளியிடம். அது பின் 'வெள்ளிடையிற்
கூறின்'   என்பதனானும்   உணரப்படும்.  எறியப்படுதல்  -  வீசப்படுதல்.
எனவே  வெள்ளிடையிற்  கூறின்  அவ்வெள்ளிடைக்கண் எல்லாத்திசையும்
நீர்த்தரங்கமும்போல   வீசப்பட்டுச்   சேறலானும்   என்பது  பொருளாம்.
திரைவீசுங்கால்   ஒன்றாலொன்று     வீசி     எழுப்பப்படுதல்   போல,
எழுத்தொலியும்  ஒன்றாலொன்று  வீசி  எழுப்பப்படுதலின்  "எறியப்பட்டு"
என்றார்.  அதனை  "உட்கப்பட்டார்"  என்பதுபோலச்   செய்வினையாகக்
கொள்ளினுமமையும். ஒன்றாலொன்று வீசியெழுப்பப்படுதலின் உருவுடைமை
பெறப்படும்.  அவ்வொலி  நீர்த்தரங்கம்போல   வட்டவடிவாய்ச்  சேறலின்
அதன்   வடிவுடைமையும்  பெறப்படும்.  எல்லாத்திசையு மென்பது கதம்ப
முகுள   நியாயத்தையும்,  நீர்த்தரங்கமென்பது  வீசிதரங்க  நியாயத்தையும்
குறித்து வந்தன.
 

கதம்பமுகுளநியாயமாவது : கடப்பம்பூவில்  முதலாவதுண்டான மொட்டு
ஒரேகாலத்தில்  நான்குபக்கமும்  பல மொட்டுக்களை உண்டாக்கிக்கொண்டு
தோன்றுவதுபோல்வ     தொருமுறை.    அதுபோல   முதலாவதுண்டான
எழுத்தொலி தன் நாற்பக்கமும் ஒரே நேரத்திற் பல ஒலிகளை உண்டாக்கிக்
கொண்டு  தோன்றும். கடம்பு  பூக்குங்கால்  தன் பூவைக் கதிராகப் பூக்கும்.
அக்கதிரின்  தலையில்  ஒரு சிறு மொட்டிருக்கும். அதன் மேற்பக்கங்களிற்
பல மொட்டிருக்கும்.
 

வீசிதரங்கநியாயமாவது : ஒரு  குளத்தில்  நீரிடையே  ஒரு கல்லை இட
அந்தஇடத்தில்     முதலாவதுண்டான     திரை    தன்னைச்சூழப்பின்னு
மோர்திரையை  எழுப்ப,   அது   தன்னைச்சூழப்  பின்னுமோர் திரையை
யெழுப்ப,  இப்படியே  கரை  சாரும்  வரையும்  வேறு  வேறு திரைகளை
எழுப்பிச்  சேறல்போல்வதொருமுறை.  அதுபோலவே  முதலாவ துண்டான
எழுத்தொலி, தன் நாற்புறமும் ஒன்றையொன்று சூழ வேறு வேறு ஒலிகளை
எழுப்பிச்    செல்லும்   என்க.   இவை   முறையே  தருக்க  சங்கிரகத்தி
னுரைக்குரையாகிய    நீலகண்டீய    உரையின்    வியாக்கியானங்களாகிய
நிருதமப்பிரகாசிகையிலும், இராமருத்திரீ யத்திலும் கூறப்பட்டுள்ளன.