இன்பதுன்பத்தையாக்கல் : வல்லோசையாற் றுன்பத்தையும் மெல்லோசையா லின்பத்தையு மாக்கல். |
உருவுமுருவுங் கூடிப் பிறத்தல் : உயிர்வடிவும் மெய்வடிவுங் கூடிப் பிறத்தல். உருவுமுருவுங்கூடுமன்றி உருவமில்லாதன கூடமாட்டா. அதனானும் உருவுடைமை பெறப்படும். நாமுதலிய உருவங் கூடிப்பிறத்தல் என்று கொள்ளின் பின்னர் "தலையு மிடறும் நெஞ்சு மென்னும் மூன்றிடத்தும் நிலைபெற்றுப் பல்லு மிதழும் நாவும் அண்ணமு முறப்பிறக்கும்" எனக் கூறுதலான் அது பொருந்தாது. கூடிப்பிறத்தல் என்பதன்கண் கூடுதல் என்னுஞ் சொல்லிலேயே பொருள் சிறந்து நின்றது. பிறந்தபின்னே அவற்றின் கூட்ட மறியப்படுதலின் பிறத்தலானு மென்றார். |
"உந்திமுதலாகத் தோன்றி எண்வகை நிலத்தும் பிறந்து கட்புலனாந் தன்மையின்றிச் செவிக்கட் சென்றுறும் ஊறுடைமை யானும்" என்றதனாற் பிறப்புடைமையானும் பரிசமுடைமையானும் உருவுடைய தெழுத்தென்பது கூறப்பட்டது. |
எண்வகை நிலம் : எழுத்துக்களுக்குப் பிறப்பிடமாகச் சொல்லப்பட்ட எண்வகை இடம். அவை: தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் என்பன. இவற்றை நன்னூலார் இடமும் முயற்சியுமென இருவகையாகப் பகுப்பர். இடம்: தலை மிடறு நெஞ்சு மூக்கு என்பன. முயற்சி: பல் இதழ் நா அண்ணம் என்பன. |
விசும்பிற் பிறந்தியங்குவதோர் தன்மை உடைமையானும் என்றதனாற் காற்று விசும்பின்கட் பிறந்து இயங்குவதுபோல இவ்வெழுத் தோசையும் விசும்பின்கட் பிறந்து இயங்கு மியல்புடைய தென்பது நச்சினார்க்கினியர் கருத்துப்போலும். |
கடையிற்கூறிய இவ்வேதுக்களிரண்டையும் எழுத்துக்களுக்கும் காற்றுக்கும் முறையே தனித்தனிச் சிறப்பாகவும் ஏனைய ஏதுக்களைப் பொதுவாகவும் நச்சினார்க்கினியர் கூறியிருக்கலா மென்பதும் எமது கருத்து. |
இனிக் காற்றிற் கேற்பவும் குழல்போன்றவற்றிற் புகுத்தப்புகுதலானும் குடம்போன்றவற்றிற் புகுத்த அடிப்புறத்தே தாக்குண்டு மீண்டு வருதலானும் வெளிநிலத்தே வீசிச்சேறலானும் மென்மையாக வீசலானே இன்பத்தையும் வன்மையாக வீசலானே துன்பத்தையு மாக்கலானும், இருதிசைகளான் வருங்காற்று ஒன்றுகூடித் தோன்றலானும் உருவுடைமை அறியப்படும் எனக் கொள்க. |
கந்தருவம் - இசைநூல், குறி - பெயர். இதனுட் கூறுகின்ற உரைச் சூத்திரங்க ளென்றது இப்பாயிரத்திற் கூறுகின்ற "யாற்ற தொழுக்கே என்பது முதலிய சூத்திரங்களை. |
அரில்தப என்பது குற்றந்தீர்தலையும் தெரிந்து என்பது விடை கூறுதலையும் உணர்த்தின. |