ஆசிரியர் ஒற்றுங் குற்றுகரமும் எழுத்தென்று கொண்டனராதலின் மா கா என நின்ற சொற்கள் மால் கால் என ஒற்றடுத்துழி ஒற்றினான் வேறு பொருள் தந்து நிற்றலின் இவற்றை ஈரெழுத்தொருமொழியென்றும், நாகு வரகு என்னுங் குற்றுகர ஈற்றுச் சொற்களிற் குற்றுகரங்கள் சொல்லொடுகூடிப் பொருள் தந்து நிற்றலின் இவற்றை ஈரெழுத்தொருமொழி மூவெழுத்தொருமொழி யென்றுங் கோடுமென்பார்க்கு, ஆசிரியர் பொருளைக் கருதாது மாத்திரை குறைந்தமைபற்றி 'உயிரில் லெழுத்து மெண்ணப் படாஅ' (செய்யுளியல் - 44) 'குறிலேநெடிலே குறிலிணை' (செய்யுளியல் - 3) என்னுஞ் செய்யுளியற் சூத்திரங்களால் இவற்றை எழுத்தெண்ணவும் அலகிடவும் பெறா என்று விலக்குவாராதலின், அவற்றால் ஈண்டு ஈரெழுத்தொருமொழியும் மூவெழுத்தொருமொழியுங் கொள்ளின், மாறுகொளக் கூறலென்னுங் குற்றந் தங்குமென்று மறுக்க. |
கண்ணும் ஆசிரியர் குற்றியலுகரப் புணரியலில் நெடிற்றொடர்க் குற்றியலுகரத்தை ஈரெழுத்தொருமொழி [ சூ - 16 ] என்றும், ஆய்தந்தொடர்ந்தனவற்றை ஆய்தத் தொடர்மொழியென்றும், மற்றும் ஈரொற்றுத் தொடர்மொழியென்றும், வல்லொற்றுத் தொடர் மொழியென்றும் கூறுவதை நோக்கும்போது ஒற்றையும் குற்றியலுகரத்தையும் கூட்டி மொழிவகுத்தலே அவர் கருத்தாதல் நன்கு புலப்படும். அன்றியும் நச்சினார்க்கினியர்க்கும் எழுத்து நோக்கி மொழி வகுத்துக்கோடலே கருத்தாதல் 145-ம் சூத்திர உரையில் மெய் முதலியவற்றை ஈரெழுத்து மொழியென்றே கூறலா னறியப்படும். எழுத்தாற் சொல்லாதலே கூறலின் கொல் என்புழி லகரமுஞ் சேர்ந்து இரண்டெழுத்தாலாய மொழியென்று கூறுவதேயன்றி, லகரத்தைத் தள்ளிக் ககர ஒகரத்தாற் றனியேயானதென்று கூற முடியாதாகலானும் அது பெருந்தாமை யறியப்படும். உரையாசிரியர்க்கு மிதுவே கருத்தாத லவருரையா னுணர்க. அன்றியும் 'அகர முத னரக விறுவாய்' என்புழி ஆசிரியர் ஒற்றினையும் எழுத்தென்று கருதினாரெனின் ஆண்டு எழுத்தின் தன்மை கூறிற்றென்ற நச்சினார்க்கினியர்க்கு ஈண்டும் [எழுத்தான் மொழியாதற்கண்ணும்] எழுத்தின் தன்மை கூறல் உடன்பாடேயாதல் காண்க. |