எ - டு. நிலப் பெயராவது இடத்தினாற் பெற்ற பெயர். அது சோணாட்டான், சோணாட்டாள், சோணாட்டார் எனவும்; மதுரையான், மதுரையாள், மதுரையார் எனவும் வரும். 1குடிப்பெயராவது குடியினானாய பெயர். அவையாவன: சேரலன் சோழன், பாண்டியன் என்பன. இன்னும் “வந்ததுகொண்டு வாராதது முடித்தல்” என்பதனால் குலத்தினானாகிய பெயருங் கொள்க. அவையாவன: அந்தணன் அந்தணி, அந்தணர் என்பன. அஃதேல் பாம்பு, நாய், மணி என்பனவும்; அந்தணர், அரசர் என வருமால் எனின் அவ்வாறு வருவன அந்நூலகத்து ஆளுதல் வேண்டி ஆசிரியன் இட்டதோர் குறி என்று கொள்ளினல்லது பாம்பைப் பிடித்தான் என்னும் பொருட்கண் அந்தணனைப் பிடித்தான் என்றவழி அப்பொருள் புலப்படாமையின், அது வழக்கன்றென மறுக்க. குழுவின் பெயராவது பலர் கூடின கூட்டத்தாற் பெற்ற பெயர், பலர் அவையத்தார் என்பன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. வினைப்பெயராவது உண்டவன், உண்டவள், உண்டவர் என வரும். உடைப் பெயராவது உடைமையாற் பெற்ற பெயர். அவை நிலமும் பொருளும் கருவியும் பற்றிவரும் குட்டுவன், பூழியன் என்பன குட்ட நாட்டையும், பூழி நாட்டையும் உடையான் என்னும் பொருள்பட வந்தன. முடியான், குழையான், குழையாள், குழையார் என்பன பொருள் பற்றி வந்தன. வேலான், வில்லி என்பன கருவி பற்றி வந்தன. பண்புகொள் பெயராவது பண்பினாற் பெற்ற பெயர், கரியான், நெடியான், நல்லான், தீயான், நல்லாள், நல்லார் என வரும். பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயராவது தாயர், தாய்மார், தந்தையர், தந்தைமார் என்பன. இது முதலாகிய நான்கு பெயரும் இருதிணைக்கும் பொதுவாகி வருதலின் பல்லோர்க் குறித்த என்றார். அஃதேல்; அஃறிணைக்கண்ணும்2 “கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்ப்ப, இன்னே வருகுவர் தாயர்” என வந்ததாலெனின், ஆண்டு உயர்த்துச் சொல்லுதற்கண் வந்தது. அதற்கு இலக்கணம் “செய்யுண் மருங்கினும்” என்னும் புறநடைச் சூத்திரத்தாற் கொள்ளப்படும். பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயராவது சினையினாற் பன்மை குறித்து வரும் பெயர். கூனர், குருடர். முடவர் என்பன.
1. இப்பகுதிபற்றிய விளக்கம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துப் பதிப்பில் சிறிது வேறுபட உள்ளது அது வருமாறு:--குடிப்பெயராவது குலத்தினான் ஆகிய பெயர். அந்தணன், அந்தணி, அந்தணர் என்பன. அஃதேல் பாம்பு, நாய், மணி என்பனவும் அந்தணர்கள் என வருமால் எனின் அவ்வாறு வருவன நூலகத்து ஆளுதல் வேண்டி ஆசிரியன் இட்டதோர் குறி என்று கொள்ளினல்லது பாம்பைப் பிடித்தான் என்னும் பொருட்கண் அந்தணனைப் பிடித்தான் என்ற வழிப் பொருள் புலப்படாமையின் அது வழக்கன்றென மறுக்க. ‘வந்தது கொண்டு வாராதது முடித்தல்’ என்பதனான் குடியிற்குப் (அருகிய?) பெயராவன: சேரன், சோழன், பாண்டியன் என்பன. 2. முல்லைப்பாட்டு, 15, 16.
|