6. வினையியல் வினைச் சொற்குப் பொது விலக்கணம் 192. | வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும். |
என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், வினையியல் என்னும் பெயர்த்து: வினைச் சொல் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். நிறுத்த முறையானே பெயர் இலக்கணங் கூறி, அதன்பின் வினையிலக்கணங் கூறவேண்டுதலின், அதன்பிற் கூறப்பட்டது. இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், வினைச்சொல் இலக்கணம் பொது வகையான் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். வினை என்று சொல்லப்படுவது வேற்றுமை உருபு ஏலாது; காலத்தோடு தோன்றும்; ஆராயும் காலத்து, எ - று. வினை என்பது தொழில் உணர்த்தும் சொல்லாதலின் அது வேற்றுமை கொண்டு நிற்பதும் ஒருநிலை உண்டு. அந்நிலை ஒழியக், காலத்தோடு பொருந்தி நிற்குமது நம்மால் வினைச்சொல்லென வேண்டப்பட்டது, எ - று. எ - டு. அஃதாவது உண்டலைச் செய்தான் என்பது ஈண்டுத்தின்றான் எனக் காலத்தோடு ஒட்டி நிற்பது. (1) காலம் மூன்று 193. | காலந் தாமே மூன்றென மொழிப. |
காலத்துக்குத் தொகை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்ட காலத்தாம் மூன்று என்று சொல்லுவார் ஆசிரியர், எ - று. அதன் வகை வரும் சூத்திரத்துக் கூறுப. (2) காலத்தின் பெயர் 194. | இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக் காலமும் குறிப்பொடுங் கொள்ளும் மெய்ந்நிலை உடைய தோன்ற லாறே. |
காலத்திற்கு வகையும் அதற்கு உரியதோர் இலக்கணமும் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்ட காலத்தின் பாகுபாடாகிய இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் என அம்முக்காலமும்
|