[உரியியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்173

173

படர் என்பதன் பொருள்

336.படரே உள்ளல் செலவும் ஆகும்.

இ - ள். படர் என்பது நினைத்தல் என்பதன் பொருளும், செலவு என்பதன் பொருளும் படும், எ - று.

எ - டு. ‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி.’ (புறம்.47) இது நினைவு. ‘கறவை கன்றுவயிற் படர’ (குறுந்-108) இது செலவு.

(44)

பையுள், சிறுமை என்பவற்றின் பொருள்

337.பையுளுஞ் சிறுமையும் நோயின் பொருள்.

இ - ள். பையுள் என்னும் சொல்லும், சிறுமை என்னும் சொல்லும் நோய் என்பதன் பொருள்படும். எ - று.

எ - டு. ‘பையுண் மாலை.’ (குறுந்-195.); ‘சிறுமை யுறுபவோ செய்பறி யலரே.’ (நற்-1)

(45)

எய்யாமை என்பதன் பொருள்

338.எய்யா மையே யறியா மையே.

இ - ள். எய்யாமை என்னும் சொல் அறியாமை என்னும் பொருள் படும், எ - று.

எ - டு. ‘எய்யா மையலை நீயும் வருந்துதி’. (குறிஞ்சிப்-8.)

(46)

நன்று என்பதன் பொருள்

339.நன்று பெரிதாகும்.

இ - ள். நன்று என்பது பெரிது என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. ‘நன்று மரிதுற் றனையாற் பெரும.’ (அகம்-10.)

(47)

தாவு என்பதன் பொருள்

340.தாவே வலியும் வருத்தமு மாகும்.

இ - ள். தாவு என்னும் சொல் வலி என்பதன் பொருண்மையும், வருத்தம் என்பதன் பொருண்மையும் படும், எ - று.

எ - டு.‘தாவி னன்பொன் றைஇய பாவை.’ (அகம்-212..) இது வலி. ‘கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென’, (குறுந்-69.) இது வருத்தம்.

(48)

தெவு என்பதன் பொருள்

341.தெவுக்கொளற் பொருட்டே.