கிளவியாக்கம்71

சூ. 46:

வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார்

[46]
 

க-து:

பலவினைகளுக்குப் பொதுவாகிய சொல்லைக் கிளக்குமாறு
கூறுகின்றது. 
 

உரை:வேறுபட்ட  வினையை உடைய   பொருள்கட்குப்   பொதுவாகி
வரும்  சொல்லை   அவற்றுள்   ஒன்றற்குரிய  வினையாற் கிளந்து கூறார்
புலவர்.   சொல்   என்றது பொருளை. எனவே பொதுவினையாற் கிளப்பர்
என்றவாறு, பொதுப்  பொருளாவன:  அடிசில் (உணவு) அணி, இயம், படை
முதலாயவை.
 

அடிசில் என்பது தின்னுவன, பருகுவன, நக்குவன உரிஞ்சுவனவற்றிற்குப்
பொது. ஆதலின் அவற்றுள் ஒன்றாற்  கூறாமல்   அடிசில்  கைதொட்டார்,
அடிசில் உண்டார் எனவும், அணி என்பது கவிப்பன, கட்டுவன, செறிப்பன,
பூண்பனவற்றிற்குப் பொது ஆதலின் அணியை அணிந்தார், மெய்ப்படுத்தார்
எனவும், எழுப்புவன,   கொட்டுவன,   ஊதுவனவற்றிற்குப்   பொதுவாகிய
இயத்தை, இயம் இயம்பினார்,   இசைத்தார் எனவும்   எய்வன,   எறிவன,
வெட்டுவன,     குத்துவனவற்றிற்குப்      பொதுவாகிய      படையைப்
படைவழங்கினார், தொட்டார்    எனவும்    பொதுவினையாற்    கிளக்க
என்றவாறாம்.
 

சூ.47:

எண்ணுங் காலும் அதுவதன் மரபே 
(47)
 
க-து:வேறுவினைச் சொற்களை எண்ணி முடிக்குமாறு கூறுகின்றது.
 

உரை: வெவ்வேறுவினைக்குரிய      சொற்களை     எண்ணுங்காலும்
மேற்கூறியாங்கு    அதன்    அதன்   பொதுச்    சொல்லுக்கு    ஓதிய
இலக்கணமேயாம். என்றது; பொதுவினையான் முடிபுகூறுக என்றவாறு.
 

எ-டு: சோறும் கறியும் நீரும் உண்டார் எனவும்   முடியும்   மாலையும்
கழலும் அணிந்தார் எனவும் யாழும் குழலும் முழவும்  இசைத்தார்  எனவும்
வாளும் வேலும் கணையும் வழங்கினார் எனவும் வரும்.
 

சூ. 48:

இரட்டைக் கிளவி இரட்டிற்பிரிந் திசையா 
(48)
 

க-து:

இரட்டைக்கிளவிகட் காவதோர் இலக்கணங் கூறுகின்றது.