இனிப் பெயரினும் தொழிலினும் பால்காட்டிப் பிரிந்து நிற்குமாறு; இவர்தம் மெல்லடி மேலன சிலம்பே, மௌவல் நாறும் கூந்தலார் இவர் குரவை பாடினர், இவர் யாவரும் தைந்நீராடினர், இவர் கோலமிட்டனர் என்பவை பெயரின் பிரிந்து மகளிரைச் சுட்டி நின்றன. இவர் விருந்து கண்டு சமைத்தார் என்பது தொழிலிற் பிரிந்து மகளிரைச் சுட்டி நின்றது. |
இஃதவர் ஏந்தியவாள், அஃதவர் பகை தடுத்தகிடுகு, இன்றிவர் முடி கவித்தார், இவர் துணங்கையாடினார், இந்நால்வரும் மறை ஓதினர் என்பவை பெயரிற் பிரிந்து ஆடவரைச் சுட்டி நின்றன. இவர் பகையஞ்சப் போர்மேற் சென்றார் என்பது தொழிலிற் பிரிந்து ஆடவரைச் சுட்டி நின்றது. |
ஏனையவும் இவ்வாறே மரபு பற்றி வருவன வெல்லாம் வழக்கு நோக்கி அறிந்து கொள்க. |
இனி, 'மொழிந்த பொருளோடொன்ற மொழியாததனையும் முட்டின்றி முடித்தல்' என்னும் உத்தி வகையான் அஃறிணைக்கண் இப்பொதுவன் நூறு எருமையுடையன் என்பதில் எருமை பெண்பால் என உணர நிற்பதும் இவ்வரசன் நூறு யானையுடையான் என்பதில் யானை ஆண்பால் உணர நிற்பதும் கொள்க. இனி இந்நூற்பாவிற்கு உரையாசிரியன்மார் கூறிய பெயரும் தொழிலுமாகிய சொற்கள் தாமே பிரிந்து நிற்றற்கேற்பன ஆதலை அறிக. அவர் கூறிய ஆணொழி மிகுசொல்லும் பெண்ணொழி மிகுசொல்லும் வேறுபடுவினையினும் இனத்தினும் சார்பினும் (கிள - 53) என்பதனானும், தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும் (பெய-4) என்பதனானும் பெறப்படுவனவாம். அஃதாவது "வடுக அரசர் ஆயிரவர் மக்களை உடையார்" என்பதில் அரசர் ஆயிரவர் என்னும் சார்பானும் குறிப்பானும் மக்கள் என்றது வீரரை என உணரநின்றதன்றி 'மக்கள்' என்னும் சொல் அக்குறிப்பினை உணர்த்தாமையறிக. பிறவும் இவ்வாறே ஓர்ந்தறிக. தொடி, குரவை, கழல், துணங்கை, சமைத்தல், உடலுதல் என்னும் சொற்களே மரபு வகையான் ஒரு பாலை ஒழித்து நிற்கும். இத்தகு தமிழ்மொழியமைப்பு நுட்பத்தை வெளிப்படுத்தும் இன்றியமையாத இச்சூத்திரத்திற்கு மற்றொன்று விரித்து மயங்கவைத்தனர் அவர். |
| சூ. 51: | பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர் |
| அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே |
[51] |
க-து: | இருதிணைப்பெயர்களும் விரவிஒன்றனான் முடியுமாறு கூறுகின்றது. |