இதனது இதுவென வேறு வேறு காண நில்லாமல் எள்ளது குப்பை, எள்ளது சாந்து, சாத்தனதியற்கை என்றாற் போல்வனவும், வேறு வேறாகாத எனது உயிர், இராகுத்தலை என்றாற் போல வருவனவும் "இதனது இது" என்னும் பொருளனவேயாம் என்பதறிவித்தற்கு "அன்ன கிளவி கிழமைத்து" என்றார். கிளவி என்றது ஈண்டுப் பொருளை. | உரையாசிரியன்மார் இச்சூத்திர உரையுள் 'இதனது இவை' என்னும் பன்மை வாய்பாடும் அடங்க "அன்ன கிளவி கிழமைத்து" என ஆசிரியர் ஓதியதாக விளக்கங்கூறினார். இடைக்கால நூலோர் "ஆறன் ஒருமைக்கு அதுவும் ஆதுவும் பன்மைக்கு அவ்வும் உருபாம்" எனக் கூறிச் சென்றனர். மூன்றாம் வேற்றுமைக்கு இன்னும் ஆனும் மாற்றுருபுகளாக வரும் எனக்கூறியாங்கு ஆறாவதன்கண் அகரம் பன்மையுருபாக வரும் என யாண்டும் குறிப்பாகவேனும் ஆசிரியர் கூறாமையானும் நல்லிசைப் புலவோர் தம் பாட்டினும் தொகையினும் அகரம் பன்மையுருபாக வாராமையானும். அரசன் நாடுகள் - புலவர் நூல்கள் என்றாற் போல்வனவற்றிற்கு அகரம் பெய்து விரித்தல் இருவகை வழக்கினும் காணப்பெறாமையானும் ஐ முதலிய ஏனையவற்றிற்குப் பன்மையுருபு கூறப்படாமையானும் பன்மை உருபு கோடல் தொல்காப்பிய நெறிக்கும், தமிழ்மரபிற்கும் ஒவ்வாமைஅறிக. | அங்ஙனமாயின் என் கைகள் - அரசன் நாடுகள் என்பவற்றை அது என்னும் உருபான் விரித்தல் ஒக்குமோ என்னின்? ஒக்கும். அரசன் மக்கள் என உயர்திணையாயின் 'உடைய' என்னும் சொல்லுருபான் விரியுமென்க. என்னை? ஆசிரியர் குறிப்பு வினை தோன்றும் முறைமை பற்றிக் கூறுமிடத்துப் பொருட் பெயரிடமாகத் தோன்றுபவை உடைமைக் குறிப்புப்படத் தோன்றுதல் கருதி "அதுச்சொல் வேற்றுமை உடைமை யானும்" என விதித்தாராகலின் அரசனுடைய மக்கள் எனவிரியுமென்க. அச்சூத்திரத்தான் 'உடைய' என்பது சொல்லுருபாக வரும் என உய்த்துணரவைத்துள்ளமை யறியலாம். இனி இடைக்காலச் சான்றோர் இலக்கியத்துள் அரசனதுதோழன்' 'குன்றவர் தமது செம்மல்' 'நினதடியாரொ டல்லான்' - என அது உருபே வந்தவாறும் காண்க. மற்றுச் 'சம்பந்தன செந்தமிழ்' என வந்ததால் எனின் அஃது இசை நயம் கருதி வந்த தொகுத்தல் விகாரமென்க. | தன்னின் ஆகியதற்கிழமை : ஒன்றுபல குழுமியதும், வேறுபல குழுமியதும், ஒன்றியற்கிழமையும், உறுப்பின்கிழமையும் மெய் |
|
|