வேற்றுமையியல்125

காட்சி   வகையானும்   கருத்து  வகையானும் ஒன்றைத் தாங்கி நிற்கும்
பொருள்  (ஆதாரம்)   இடமாம்.   (இடுதற்காகியது  இடம்) மலையின்கண்
இருந்தான் என்புழி மலையின்கண் யாண்டிருந்தான்?  எனக்   கருதுங்கால்
உச்சி - நடு - அகம் - புறம் - அடி முதலிய வகையுள் ஒன்றைச் சுட்டுதல்
வேண்டுமன்றோ?    அங்ஙனம்   சுட்டிக்கூறப்படும் இடம் மலையென்னும்
பொதுவிடத்தின்  பகுதி (கூறு)யாதலின் கண் கால் புறம்  முதலிய சொற்கள்
இட   வேறுபாடுணர்த்தும்   பொருளாதல்   அறிக.  இவற்றை உருபென்று
கொண்டார் உரையாசிரியர். உருபே என வரைந்தார்  பவணந்தியார். உருபு
இடைச்சொல்லாக    நிற்கும்.   இவையாவும்   தனித்துப் பொருள் பயந்து
பெயராக நிற்குமாறு அறிக.
 

இவை  ஏழாவதன் பொருளாயின் ஊரைக் காத்தான், மண்ணின் இயன்ற
குடம்     என்புழி     உருபின்    பின்   காத்தல்,   இயறல்  என்னும்
அப்பொருட்சொற்கள்    விரிந்து    வருமாறுபோலக்  கண்கால்  புறமகம்
என்பவை கண்ணுருபின் பின்வரல் வேண்டுமன்றோ  எனின்?   அற்றன்று,
நெல்லுக்கு   உழுதான் என்புழி, அதற்கு வினையுடைமை என்னும் பொருள்
உழுதான்  என்னும்   வினை   காரணமாகவும்,  காட்டது யானை என்புழி
வாழ்ச்சிப் பொருள் அச்சொற்களின் இயைபு  காரணமாகவும் பெறப்படுமாறு
போல   ஊர்க்கண் செய்  என்புழி அவ் இயைபினான் ஊர்ப்பக்கத்தின்கண்
செய்   உள்ளமையையும்    ஆலின்கண்   கிடந்தஆ   என்புழி  ஆலின்
கீழ்ப்பகுதிக்   கண்  ஆ  கிடந்தமையையும்   புலப்படுத்து  நிற்குமாதலின்
அப்பொருட்சொற்கள்       விரிந்து        வரல்     வேண்டுமென்பது
யாப்புடைமையாகாதென்க. இனி  ஊர்க்கால் நிவந்த பொதும்பர், அரசனுழை
இருந்தான்,  என்புழிக் கால், உழை  என்பவை  இடத்தைத் தெளிவுபடுத்தி
நின்றமையின் ஆண்டு உருபு விரிதல் வேண்டாதாதலையும் அறிக.
 

இச்சூத்திரத்துக்   கூறப்பெற்ற 'கண்' என்பது உருபு இடைச்சொல்லன்று.
இடம்    உணர்த்தும்    பெயர்.   இதனை  அக்கண்ணி விளைந்தது என
வழங்குமாற்றான்     அறிக.   காணி    என்பது   அதனடியாகப்  பிறந்த
உடைமைப்பெயர். தேஎம்    என்பது    இலக்கணத்திற்   பயின்று வரும்
இடங்குறித்த   திரிசொல். அது மறையோர் தேஎத்து மன்றல் - கொள்ளார்
தேஎம்  குறித்த  கொற்றம், கிழவோள் தேஎத்து - கோடாய்தேஎத்து எனப்
பல கோணங்களில் வருதலின் "தேவகை" என்றார். இதற்குத்   திசைக்கூறு
எனப்     பொருள்     கூறல்   சிறவாமையறிக.  ஏனையவும்  இங்ஙனம்
வகைப்படுமாயினும்.  அவையெல்லாம்   இயற்சொல்லாய்த்  தெளிவு  பெற
நிற்றலின் உய்த்துணர்ந்து கொள்ள வைத்தார்.