இனி இவ்இடப்பொருள் மணியின்கண் ஒளி எனப்பொருள் முழுவதுமாகவும் ஆகாயத்தின்கண் பருந்து எனக் கருதிக் கோடலாகவும், உடம்பின்கண் உறுப்பு என ஒற்றுமை உடையதாகவும் அரசருள் ஏறு-தெய்வத்துள் வைக்கப்படும் எனக் கூட்டிப் பிரித்தலும் பிரித்துக் கூட்டலும் ஆகிய கருத்துப் பொருளாகவும் வருமாறு கண்டு கொள்க. |
ஏனைய வேற்றுமைகளுள் எயிலைக் காத்தான், மண்ணின் இயன்ற குடம், நெல்லுக்கு உழுதான், காக்கையிற் கரியன், சாத்தனது இயற்கை என உருபும் வேற்றுமை செய்தற்குரிய பொருளும் ஒருங்கு வரும். ஏழாவதன் உருபும் ஏழாவதன் பொருளும் இடக்குறிப்பே பற்றி ஒத்த பொருளினவாய் நிற்றலின் இரண்டும் ஒருங்கு வாராமல் உருபு நிற்கும் கால் பொருட்சொல் குன்றியும் பொருட்சொல் நிற்குங்கால் உருபு குன்றியும் நிற்கும் என அறிக. இந்நுட்பத்தினை ஓராது கண் கால் முதலியவற்றை உருபு எனக் கொள்வார் ஒரு சாரார். அது பொருந்தாமை மேற்கூறப்பட்டது. |
சூ. 83 : | வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை ஈற்று நின்றியலும் தொகைவயிற் பிரிந்து பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும் எல்லாச் சொல்லும் உரிய என்ப |
[22] |
க-து : | வேற்றுமைத் தொகை மொழிகளை விரித்துப் பொருள் கொள்ளும் முறைமை கூறுகின்றது. |
|
அஃதாவது இது காறும் வேற்றுமை உருபுகள் விரிந்து நின்ற வழி எய்தும் வேற்றுமை நிலைகளையும் அவ்வேற்றுமைகளைச் செய்யும் பொருட் பாகுபாடுகளையும் பற்றிக் கூறினார். அவை தொடர் மொழிக்கண் புலப்படும் இலக்கணமாகும். எழுவாய் வேற்றுமை ஆதற்கு உரியவாம் என்ற தொகை மொழிகள் விரிந்த வழி அவை தொடர் மொழிகளாகுமன்றோ? அவ்வழி இவ்விலக்கணமெல்லாம் அவற்றிற்கு எய்துமாகலின் அவற்றை விரித்துக் கொள்ளும் முறைமை இதுவென்பதாகும். |
"வேற்றுமைத் தொகையே வேற்றுமை இயல" (எச்-17) என ஆசிரியர் பின்னர் மாட்டேற்றிக் கூறுவாராதலின் ஈண்டு அவற்றை விரித்துக் கொள்ளுமாறு கூறப்பட்டதென்க. |
உரை : முன் மொழி நிலையலாகத் தொகும் வேற்றுமைத் தொகையிடத்துத் தொக்கு நிற்கும் உருபையும் பொருளையும் |