வேற்றுமை மயங்கியல்131

உரை :மெய்யுறுதல்தொழில்   அல்லாத    சார்பென்னும்    சொற்கு,
கண்ணென்னும் ஏழாம் வேற்றுமையும் உரிமையுடைத்தாகும்.   உம்மையான்
ஆண்டும் இரண்டாவது வருதலே சிறப்புடைத்தாம் என்று கொள்க.
 

கருமமல்லாச்    சார்பிற்கு    ஏழாவதும்     உரித்தெனவே   கருமச்
சார்பிற்கு     இரண்டாவதே   உரியது   என்பது   பெறப்படும்.  கருமச்
சார்பாவது:   தூணைச்     சார்ந்தான்,   ஊரைச்  சார்ந்தான், அரசனைச்
சார்ந்தான் எனத்    தொழிற்பாடு     புலனாகக்    கண்ணுற்று நிற்றலாம்.
கருமமல்லாச்    சார்பாவது:    சைவ     நெறியைச்   சார்ந்தான், சமண
நெறியைச்   சார்ந்தான்  எனத்  தொழிற்பாடு  கருத்துவகையான்  புலப்பட
நிற்றலாம்.
 

எ-டு :சைவ நெறிக்கண்  சார்ந்தான்  எனவரும்.  அரசனது கொள்கை
வழி    நிற்பது     பொருளாயின்    அரசன்கண்  சார்ந்தான் எனவரும்.
இரண்டாவதற்குரித்தாக       ஓதப்பெற்ற       'சார்பு'        தொழில்,
கருத்துவகையான்   நிகழுங்கால்  உருபேற்ற சொல் இடப்பொருள் தோன்ற
நின்றலின் ஏழாவது மயங்கும் என்னாது உரிமையும் உடைத்தே என்றார்.
 

இஃது தன் பொருளிற்றீராமல் இரண்டு  வேற்றுமைக் கண்ணும் சேறலின்
பொருள்    மயக்கமாம்.    மேலை   இயலுள்   ஏழாவது அதிகாரப்பட்டு
நின்றமையின்    இரண்டாவது    ஏழாவதனோடு   மயங்கலை  முதற்கண்
தொடங்கினார் என்க.
 

சூ. 85 :

சினைநிலைக் கிளவிக்கு ஐயும் கண்ணும் 

வினைநிலை ஒக்கும் என்மனார் புலவர் 

[2]
 

க-து : 

சினைக் கிளவியின்கண் இரண்டும் ஏழும் மயங்குமென்கின்றது.
 

உரை :ஒரு பொருளினது   உறுப்பு   என்னும்   நிலையைப்  பெற்ற
சொல்லுக்கு ஏற்ற வினை, முடிபாக வருங்கால் இரண்டனுருபும்  ஏழனுருபும்
ஆண்டு வருவதற்கு ஒக்கும். நிலைவினை என மாறுக.
 

எ-டு :கண்ணைக்   குத்தினான்  -  கண்ணுட்  குத்தினான், கிளையை
வெட்டினான் - கிளையின்கண் வெட்டினான் எனவரும்.
 

குத்தப்படும்   பொருளும்   வெட்டப்படும் பொருளும் அத்தொழில்கள்
நிகழ்தற்கு   இடமாகவும் அமைதலின்  இரண்டு உருபிற்கும் ஏற்பனவாயின.
காத்தல் புகழ்தல்   போன்ற  ஒவ்வா வினைகள்  மயங்காவாதலின், ஒக்கும்
வினைகளே கொள்ளப்படு