சூ. 77:'இதனின் இற்றுஇது' - இதன் பொருள் மயக்கந்தருவதே. இப்பொருளினின்று இத்தன்மைத்து இப்பொருள். அஃதாவது வேற்றுமை ஏற்ற சொல் ஓர் அளவையாக - எல்லையாக நிற்றல் (பக்-114) இதனின் இற்று இது எனவரும் உறழ்ச்சியாகிய அளவை ஐந்தன் பொருள் (பக்-10) இவ்வாறு அளவை என்ற பெயரான் நீக்கப் பொருளையும் ஒப்புப் பொருளையும் இவ் உரைகாரர் குறிப்பிடுகிறார். தொல்காப்பியனார் விரித்துக் கூறாத எல்லைப் பொருளை எடுத்தோத்தினான் அடக்கினார் என்றார். ஏதுப் பொருளையும் எல்லையுள் அடக்குதற்கண் சிக்கல் ஏதும் இல்லை. கல்வியிற் பெரியன் கம்பன் - கல்வி என்ற ஏதுப் பொருளை எல்லையாகக் கொண்டு கம்பன் பெருமை புலப்படுத்தப்படுகிறது. ஐந்தாவதற்கு நீங்கல், ஒப்பு, எல்லைப் பொருள்களை ஓராற்றான் கொள்ளும் உரைகாரர் ஏதுவை ஐந்தாவதற்கு ஏலாது மூன்றன் மாற்றுருபாகிய இன் என்பதன் பொருளாகக் கொண்டதனால் பலநூற்பாக்களுக்கு வேற்று விளக்கந்தரும் நிலை ஏற்பட்டுள்ளது. (சூ. 104-கொள்க) |