222வினையியல்

அம்மும்  எம்மும்  எதிர்காலத்தொடு  வருங்கால்  அன்பெறாதும்  வரும்.
எதிர்காலமுணர்த்தும்   வகரத்தொடு   சிறுபான்மை  குகரமும்   உகரமும்
சாரியையாக  வரும். ஓரெழுத் தொருமொழிகளும்  இருவகை உகர  ஈற்றுச்
சொற்களும் இன்சாரியையொடு வரும். காலமுணர்த்தும்  இடைச் சொற்களை
ஆசிரியர்  விதந்து  கூறினாரில்லை   எனினும்  "வினைசெயல்  மருங்கின்
காலமொடு  வருநவும்"  எனக்  குறித்துச் "சொல்வரைந்தறியப்  பிரித்தனர்
காட்டல்" என  ஆணையும்  கூறினமையான்  சான்றோர்  வழக்கு நோக்கி
அவை உணரப்படும் என்க.
 

இறந்தகாலமுணர்த்துவன:    தடற   என்னும்    ஒற்றும்,   இகரத்தின்
திரிபாகவரும்  இன்  என்னும் இடைச்சொல்லுமாம். நிகழ்காலமுணர்த்துவன:
ஆநின்று  கின்று  என்பனவாம்.  கின்று என்பது இடைக்குறையாய்க்  கிறு
எனவும் நிற்கும். எதிர்காலமுணர்த்துவன: பகர வகர  ஒற்றும்  ககர  உயிர்
மெய்யுமாம்.
 

அவை இறந்தகாலத்தொடு  வருமாறு : எ-டு : உண்டனம் -  உண்டாம்,
உண்டெனெம் -  உண்டேம்,  உண்டனேம், டகரம் இறந்தகாலம் காட்டிற்று.
தகரம்  தானே  மிகுந்தும்  தன்கிளை  எழுத்து  மிகுந்தும் உரைத்தனம் -
வரைந்தனம். உரைத்தாம்  -  வரைந்தாம்,  உரைத்தனெம் - வரைந்தனெம்
உரைத்தேம்  -  உரைத்தனேம்,  வரைந்தேம்  - வரைந்தனேம் எனவரும்.
உகர  ஈற்றுச்  சொற்கள்  கலக்கினம், தெருட்டினம்  எனவும். உரிஞ்சினம்,
திருமினம்,  பொருநினம்  எனவும் வரும். ஈரெழுத்தொரு மொழியாக வரும்
முற்றுகர ஈற்றுச்  சொற்கள்  இடையே ஒற்று இரட்டி உற்றனன் - உற்றான்,
நக்கனன்   -  நக்கான், புக்கனன்  -  புக்கான்,  விட்டனன்  -  விட்டான்
எனவரும்.   சிறுபான்மை     கொடுத்தனன்,     சிறுத்தனன்      எனப்
பொதுவிதியொடும்  வரும்.  இவற்றை  ஏனைய  இறுதிகளொடும்   ஒட்டிக்
கண்டு   கொள்க.   றகர  ஒற்றுத்  தின்றனம்   தின்றாம்.  தின்றனெம்  -
தின்றனேம்,  தின்றேம்    எனவரும்.   இன்  இடைச்சொல்,  போயினம் -
கூயினம், போயினாம்   கூயினாம், போயினேம் -  கூயினேம்   எனவரும்.
இவற்றுள் யகரம்  உடம்படுமெய்யாகிய  உருபு.  தாவினம்,  மேவினம் என
வகர உடம்படுமெய்யொடும்வரும்.
 

அவை நிகழ்காலத்தொடு  வருமாறு: உண்ணா நின்றனம், உண்கின்றனம்,
உண்ணா     நின்றனெம்,     உண்கின்றனெம்      உண்ணாநின்றனேம்,
உண்ணாநின்றேம், உண்கின்றனேம், உண்கின்றேம் எனவரும்.