வினையியல்223

அவை  எதிர்காலதொடு வருமாறு: உண்பம்  -  உண்பாம், உண்பெம் -
உண்பேம், வருவம் -  வருவாம், வருவெம் - வருவேம் எனவும் உண்குவம்
- தின்குவம்,  உண்ணுவம் - தின்னுவம் எனவும் பாடுகம் - நகுகம் எனவும்
வரும்.
 

உம்மொடு வரும் கடதறக்கள் எதிர்காலம் பற்றி வரும். ஒருசார்சொற்கள்
உகரச்சாரியை பெற்றும்வரும். எ-டு : உண்கும்,  காண்டும், வருதும், சேறும்
எனவும்   உரிஞுதும்,   திருமுதும்,  பொருநுதும்  எனவும்  வரும்.  ககரம்
இறந்தகாலத்திற்கும்  உரியதாமெனக்  கொண்டு  நக்கனம்,   நக்காம்  என
உதாரணங்காட்டுவர்    உரையாளர்.    நக்கனம்    என்பதன்கண்    நக்
முதனிலையாகாமையின் அது பொருந்தாமையறிக.
 

இனி  உண்டும்,  வந்தும்,  சென்றும்  என  டும், தும், றும்  என்பவை
இறந்தகாலங்காட்டும்    என்பார்   பவணந்தியார்.   அங்ஙனம்   வருதல்
சான்றோர் செய்யுட்கண் காணப்பெறாமையின் அவை ஆய்வுக்குரியனவாம்.
 

காலங்காட்டும்      இடைச்சொற்கள்    பற்றிய    வரலாறு:   இறந்த
காலமுணர்த்தும்  டகர   றகரங்கள்   தகரத்தின்   திரிபேயாம்.   'தகரம்'
தொல்  என்னும் உரிச்சொல்லின் இடுங்கிய வடிவமெனக்   கருதலாம். இன்
என்பது   இற்றல்  என்னும்   சொல்லின்  முதனிலை  இடைச்சொல்லாகக்
கொள்ளப்பட்டதெனலாம்.    நிகழ்காலமுணர்த்தும்   ஆநின்று   - கின்று
என்பனவற்றுள்  ஆநின்று, என்பது  ஆகநிற்றல்  என்பதன் மரூஉவாகவும்,
கின்று    என்பது    கிற்றல்   என்பதன்    திரிபாகவும்   கொள்ளலாம்.
எதிர்காலமுணர்த்தும்    பகர    வகரங்கள்    புகல்,   வரல்   என்னும்
முதனிலைகளின் சுருங்கிய குறியீடுகளாகக் கருதலாம்.
 

சூ. 204 :

கடதற என்னும்

அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமொடு

என்ஏன் அல்என வரூஉம் ஏழும்

தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லே

(6)
 

க-து :

தன்மை ஒருமைவினைச் சொல் வருமாறு கூறுகின்றது.
 

உரை : கடதற  என்னும்   மெய்களை  ஊர்ந்து  நின்ற குற்றுகரத்தை
ஈறாகவுடையனவாகவும் என் ஏன் அல்  என்னும் ஈற்றவாய்வருவனவுமாகிய
ஏழும்    ஒருமை   உணர்த்தி   வரும்தன்மை    வினை   உயர்திணைச்
சொற்களாகும்.