இறந்த காலம் காட்டும் எழுத்தாகலின் முதனிலைகட்கேற்ப அவ்வவ் வெழுத்துக்களைப் பெற்று வருமெனக் கொள்ளுதல் தகும். |
செய்து என்னும் வாய்பாடு பெரும்பான்மையும் ஈரெழுத் தொருமொழி தொடர் மொழிகளை முதனிலையாகக் கொள்ளுமிடத்துத் திரியாமலும் சில முற்றுகர மொழிகளையும் குற்றொற்று மொழிகளையும் முதனிலையாகக் கொள்ளுமிடத்து இகர ஈறாயும் ஓரெழுத்தொரு மொழிகளை முதனிலையாகக் கொள்ளுமிடத்து யகர ஒற்றீறாயும் நிற்கும். |
இனிச் செய்து என்னும் வாய்பாட்டுப் பொருள்பட வரும் இகரமும் யகரப்புள்ளியுமாகிய இவ் இறுதி இடைச் சொற்கள் செய்யுளின்கண் அகவல் முதலாய பாவோசை நயங்கருதி முதனிலைத் தொழிற் சொற்களை விகாரப்படுத்தித் தன் வடிவு திரியாமல் செய்யுள் வழக்காக வரும். |
எ-டு : நசைஇ, நடைஇ, கடைஇ, தழீஇ, உடீஇ, நிறீஇ, கொளீஇ எனவும் விராஅய், பராஅய், உலாஅய் எனவும் வரும். |
செய்யூ : என்பது பின்வரும் தொழிற்கு முன்னர் வினையின் இடையீடின்மை உணர்த்தி இறந்தகாலம் பற்றி, உண்ணூ வந்தான், படுமகன் கிடக்கை காணூஉ பெரிது வந்தனளே, நிலம்புடையூஉ எழுதரும் வலம்படு குஞ்சரம். எனவரும். இவ் ஊகார ஈறு ஆகாரமாய் வேறுபட்டு 'நிலங்கிளையா நாணி நின்றோள்', 'கல்லாக்களிப்பர்' எனவும் வரும். |
செய்பு : என்பது முடிக்குஞ் சொற்பொருளொடு ஒருங்கு நிகழ்வதாய் அதற்குரிய காலம்பற்றி, உரிஞூபு வந்தான், கற்குபு வந்தான், தெரிபு தெரிபு குத்தின ஏறு, புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்து - வாக்குபு தரத்தர உண்டு என வரும். |
செய்தென : என்பது முடிக்குஞ் சொல்லான் உணர்த்தப்படும் பொருட்குத் தன் முதனிலைத் தொழில் காரணம் என்பதுபட உண்டெனப் பசி தீர்ந்தது - மருந்து தின்றென நோய் நீங்கிற்று, எனவரும். |
செய்யியர், செய்யிய : என்பவை எதிர்காலம் பற்றி ஏதுப் பொருட்டாய், உண்ணியர் வந்தான், உண்ணிய வந்தான் எனவரும். |
செயின் : என்பது எதிர்காலம் பற்றிக் காரணப் பொருட்டாய் மழை பெய்யின் குளம் நிறையும், அறம்புரியின் புகழ் எய்தும் |