வியங்கோட்பொருளும் தரும். அவ்வழி அது ககர உயிர்மெய் யீறாகும் எனத் தெளிதல்வேண்டும். ஏவல் கண்ணாத வியங்கோள் என்பது ஆ வாழ்க அந்தணர் வாழ்க என்றாற்போலத் தன் விருப்பத்தைப் புலப்படுத்தி நிற்கும். வியங்கொளுவப்பட்ட பொருள் அதனை ஏற்றுச் செயல்பட வேண்டுவதின்று, செயல்படற்கு இயலாததாகவே அஃதமையும், நீவாழ்க, நீசாக, நீஒழிக எனவரும். இவற்றை ஏற்று அம்முன்னிலைப் பொருள் அவ்வாறே செயற்பட்டதாயின் அவை ஏவல் கண்ணிய வியங்கோளாகி விடும். |
இங்ஙனம் தெரிபு வேறு நிலையலும் குறிப்பிற்றோன்றலுமாக ஆக்கம்பெற்றுப் பொருள் உணர்த்தி வரும் மொழியமைதியை நுணுகி நோக்காமல் தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் விளக்கஞ்செய்து கூறுதல் மொழியியலுக்கு மாசாகும் என்க. |
செயற்கு : என்பது இன்னதற்கு என்னும் பொருள்பட எதிர் காலம் பற்றி உணற்கு வந்தான், தினற்கு வந்தான் எனவரும். உணற்கு, தினற்கு என்பவற்றைத் தொழிற்பெயர் நான்கனுருபு ஏற்று நின்றனவாகக் கொள்ளாமோ? எனின், கொள்ளாம். என்னை? தொழிற்பெயர் நான்கனுருபு ஏற்றுவந்த சொல்லாயின் அது கோடற்பொருட்டாய் நிற்கும். அஃதாவது தன்னைப்பிறிது ஒரு பொருள் உண்ணுதற்குத்தான் உணவாக வந்தான் என்பது பொருள், வினையெச்சமாயின் காரணப்பொருட்டாய் வரும். அஃதாவது தான் உணவை உண்ணுவதற்காக வந்தான் என்பது பொருள். ஆதலின் வினைஎச்சம் வேறு; நான்கனுருபேற்ற தொழிற் பெயர்வேறென அறிக. |
இனிப் பொருந்து மாற்றான் இவ்வாய்பாடுகளைத் தழுவிக் குறிப்புவினைகள் வரும். அவற்றை ஓர்ந்து அமைத்துக் கொள்க. விருந்தின்றி உண்டபகல், நாளன்று போகி எனச் செய்து என்னும் வினையெச்சக்குறிப்பாயும், அவா உண்டேல் உண்டாம் சிறிது எனச் செயின் என்னும் வினைஎச்சக் குறிப்பாயும் வரும். பிறவும் சான்றோர் வழக்கினுள் வருமாறு அறிந்து அமைத்துக் கொள்க. |
வினைஎச்சம் பெயரெச்சம் பற்றியதொரு சிறு குறிப்பு |
வினையெச்சம் : வினை என்பது ஒரு பெயர்ப்பொருளின் செயல் குறித்த சொல்லாகும். செயலின் குறியீடு உணர்த்தின் அது தொழிற்பெயராம். அது காலத்தொடு காலஇடைச்சொல், (காலக்குறிப்பு) கூடி ஒருவினை முதலுக்குப் பயனிலையாக |