அவை : கற்றபின், தின்னாமுன், நாடுங்கால், வந்தக்கடை, ஆடுவழி, காழ்த்தவிடத்து என ஒரு சொல் நீர்மைத்தாய் நிற்குங்கால் அவற்றின் முதனிலைகள் காலமுணர்த்தாமல் இறுதி நிலைகளே காலமுணர்த்தலின் "அன்ன மரபிற் காலங் கண்ணிய என்ன கிளவியும்" என விளங்கக் கூறினார். |
எ-டு :பின் : நீயிர் பொய் கூறியபின் மெய்கூறுவார் யார்? - நீயிர் பொய்கூறாநின்றபின் மெய் கூறுவார் யார்? கற்றபின் நிற்க அதற்குத்தக எனப் 'பின்' ஈற்று வினையெச்சம் மூன்று காலமும் உணர்த்திவரும். |
முன் : மருந்துதின்னாமுன் நோய் தீர்ந்தது-மருந்துதின்னா முன் நோய் தீரும். நீயிர் எம்மூர்க்கு வருமுன் எதிர் கொள்வேன் என 'முன்' ஈற்றுவினையெச்சம் மூன்றுகாலமும் உணர்த்திவரும். |
கால் : வணங்கி நாம் விடுத்தக்கால், அகன்றவர் திறத்தினி நாடுங்கால் எனக் 'கால்' ஈற்று வினையெச்சம் இறப்பும் எதிர்வும் உணர்த்தி வரும். |
கடை : தொடர்கூரத் துவ்வாமை வந்தக்கடை - எனக் கடையீற்று வினையெச்சம் இறந்தகாலம் உணர்த்தி வரும். |
வழி : "விடுவழி விடுவழிச் சென்றாங்கவர் தொடுவழித்தொடு வழி நீங்கின்றாற் பசப்பே" எனவும் "உரைக்கும் வழிக் காண்மின்" எனவும் "அவள் ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே," எனவும் 'வழி' என்னும் ஈறு மூன்று காலமும் உணர்த்தி வரும். |
இடத்து : "களையுநர் கைகொல்லும் காழ்த்தவிடத்து" எனவும் "உற்றவிடத் துதவுவார் நல்லோர்" எனவும், "வருமிடத்துக் காண்மின்" எனவும் "இடத்து" என்னும் ஈறு மூன்றுகாலமும் உணர்த்தி வரும். |
அன்ன மரபின் காலங்கண்ணிய கிளவியாய்வருவன : வான், பான், ஆல், மல், மை முதலியவாம். எ-டு : "கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தான்" "அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்" "அற்றால் அளவறிந்துண்க" எனவும் "கூறாமற் குறித்ததன் மேற்செல்லும் கடுங்கூளி" எனவும் "கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்" எனவும் வரும். மையீறு மே எனத்திரிந்தும் வரும். |
"புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்" எனவருமிடத்துப் பாக்கு என்பதை வினையெச்ச ஈறாகக் கொள்வர் ஒருசாரார். அதனைச் செயற்கு என்பதன் திரிபாகக் கோடலே நேரிதென்க. |