256வினையியல்

இனிக்  காணுமேற்   கூறும்  வருமேற்   காணுதும்   எனவரும்  'ஏல்'
என்பதனை  அன்னமரபின்பாற் படுத்துக்  கொள்க.  ஏல்  என்பது எனின்
என்பதன்  மரூஉவாகிய ஏன்   என்பதன்  திரிபாய்ச்   செயின்   என்னும்
வாய்பாட்டினுள்   அடங்கும்.   அது    வழக்கின்கண்    உண்பானேனும்,
வருவானேனும்   என    முற்றுச்    சொல்லின்    பின் உம்மையடுத்தும்,
காண்பானேல், காணுமேல் என லகர ஈறாகத் திரிந்தும் வரும்.
 

இனி, என்ன கிளவியும்  என்றதனான்  அல்லது  அல்லால் அல்லாமல்
எனவரும்   குறிப்பு   வினையெச்சங்களும்   கொள்க.  இவற்றை 'அன்றி'
என்பதன்    திரிபாகக்  கோடலே    நேரிதாம்.   எ-டு :   "அதுவல்லது
ஊதியமில்லை    உயிர்க்கு"    (குறள் - 231)  "தனக்குவமை யில்லாதான்
தாள்சேர்ந்தார்க்  கல்லால்  மனக்கவலை  மாற்ற லரிது" எனவரும். பிறவும்
சான்றோர் வழக்கு நோக்கிக் கொள்க.
 

சூ. 231 :

அவற்றுள்

முதனிலை மூன்றும் வினைமுதல் முடிபின

(33)
 

க-து :

வினையெச்ச   வாய்பாடுகளுள்  முதல்   மூன்றற்கும்  முடிக்கும்
பொருள் ஆமாறு கூறுகின்றது.
 

உரை : மேற்கிளந்தோதப்    பெற்ற    பதினைந்து    வினையெச்ச
வாய்பாடுகளுள் முதல்  நின்ற செய்து   செய்யூ  செய்பு என்னும் மூன்றும்
தம்வினை முதலுக்குரிய முற்று வினையொடு முடியும் இயல்பினவாம்.
 

வினைமுதல்   முடிபின   என்றதனான்   இவ்விதி  முடிக்குஞ்  சொல்
பற்றியதன்று; சென்று முடியும் பொருள் பற்றியதென்பது புலனாகும்.
 

எ-டு :சாத்தன், உண்டுவந்தான் - உண்ணூவந்தான் - உண்குபுவந்தான்
எனவும்,  கற்றுவல்லனாயினான்   -    கல்லூவல்லனாயினான்  -  கற்குபு
வல்லனாயினான் எனவும் வரும்.
 

'செய்து'என் எச்சக்குறிப்பாக  வரும்    அன்றி   இன்றி  என்பவையும்
"தொல்லெழில்  வரைத்தன்றி   வயவுநோய்  நலிதலின்" எனவும், "தம்மின்
றமையா நந்நயந் தருளி" எனவும் வரும்.