எ-டு :சாத்தன் உழுது ஏரொடு வந்தான். உழுது சாத்தன் வந்தான் எனவும். இது கொல்லும் காட்டுள் யானை-இது கொன்ற காட்டுள் யானை எனவும் வரும். |
சிவணும் குறிப்பின வரையார் எனவே சிவணாக்குறிப்பின வரையப்படும் என்பதாயிற்று. அவை : உண்டு விருந்தொடு வந்தான் என்றும், வல்லமெறிந்த நல்லிளங்கோசர் தந்தை மல்லல் யானைப் பெருவழுதி என்றும் கவர் பொருள் தருவனவாய் வருவன, உண்டு பின்னர் விருந்தொடுவந்தான் என்பதும் வல்லமெறிந்த பெருவழுதி என்பதும் விருந்தொடு உண்டு வந்தான் எனவும் வல்லமெறிந்தகோசர் எனவும் பொருள்தரற்குரியவாய் நின்று கவர்தலின் வரையப்படும் என்க. எச்சொல்லாயினும் என்றதனான். உழுது விரைந்து வந்தான் - கவளங்கொள்ளாக் களித்தயானை என - எச்சங்கள் இடைநிலையாக வருதலும் கொள்க. இவ்விடை நிலைகளை இடைப்பிறவரல் எனவும் கூறுவர். |
சூ. 239 : | அவற்றுள் |
| செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கும் |
| மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம் |
| அவ்விடன் அறிதல் என்மனார் புலவர் |
(41) |
க-து : | செய்யும் என்னும் சொல் வடிவு திரிந்து வரும் மரபு கூறுகின்றது. |
|
உரை: மேற்கூறிய எச்சவாய்பாடுகளுள், செய்யும் என்னும் பெயரெச்சச் சொற்கண்ணும் (உம்மையான்) செய்யுமென்னும் முற்றுச் சொற்கண்ணும் ஈற்றுமிசை உகரம் தான் ஊர்ந்து நிற்கும் மெய்யொடும் (உம்மையான்) மெய்யொழித்தும் கெடும். அங்ஙனம் கெடுமிடங்களை அறிந்து கொள்க என்று கூறுவர் புலவர். கிளவிக்கு என்றது உருபுமயக்கம். |
ஏற்புழிக்கோடல் என்பதனான், மெய்யொடுங்கெடுதல் எச்சத்திற்கும் மெய்யொழித்துக் கெடுதல்முற்றிற்கும் கொள்க. |
எ-டு :வாவும் புரவி, ஆகும் பொருள் என்பவை வாம்புரவி ஆம்பொருள் எனவரும். இவை பெயரெச்சம். அம்பலூரும் அவனொடு மொழியுமே என்பது மொழிமே என்றும் கட்சியுட் காரி கலுழும் என்பது கலுழ்ம் என்றும் வரும். இவை முற்று. ஆடும், கூடும், வாழும், அளிக்கும், வழங்கும் என்றாற் போல்வன கெடா ஆகலின் 'அவ்விடனறிதல்' என்றார். |
கிளவிக்கும் என்னும் உம்மை வருமொழி நோக்கிக் குன்றியது. |