சூ. 240 : | செய்தென் னெச்சத்து இறந்த காலம் |
| எய்திட னுடைத்தே வாராக் காலம் |
(42) |
க-து : | 'செய்து, முதலாய வினை எச்சங்களுள் சில "தம்மரபினவாய்க்" காலம் மயங்கி வருமாறு கூறுகின்றது. |
|
உரை:செய்து என்னும் எச்சத்தினது இறந்தகாலம் எதிர் காலத்தொடு பொருந்தி வரும் இடனும் உடைத்தாகும். |
எ-டு :சாத்தன் (நாளை) உண்டு வருவான் என்றவழிச் செய்து என்னும் எச்சம் வருவான் என்னும் எதிர்காலத்துச் சொல்லொடு பொருந்தி வந்தவாறு காண்க. |
உண்ணுதல் தொழில் வருதற்கு முன் நிகழுமேனும் நாளை உண்டு வருவான் என்புழி உண்ணுதல் தொழில் நிகழாமையும் உண்ணுதலும் வருதலும் எதிர்காலத்தவாய் நிற்கின்றமையும் நோக்கி 'எய்திடன் உடைத்தே வாராக்காலம்' என்றார். |
இச்சூத்திரத்தான் 'செய்து' என்பது இறந்தகாலத்திற்குரியது என்பதை உணரவைத்து அது மயங்கும் என்பதும் கூறப்பட்டது. கொடி ஆடித் தோன்றும் எனச் சிறுபான்மை நிகழ்காலஞ் சுட்டி வருமிடமும் உடைத்தெனக் கொள்க. |
'ஒன்றென முடித்தல் தன்னினமுடித்தல்' என்பதனான் செய்யூ-செய்பு என்பவற்றிற்கும் இறந்த காலம் பற்றி வரும் ஏனைய வாய்பாட்டு எச்சங்கட்கும் இம்மயக்க விதி கொள்க. |
சூ. 241 : | முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை |
| எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து |
| மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும் |
(43) |
க-து : | செய்யுமென்னும் முற்றுச்சொல் காலம் மயங்கி வருமாறு கூறுகின்றது. |
|
உரை:மூவகையாகிய காலத்தினும் மாறுபாடின்றி நிகழத் தோன்றும் இயல்புடைய எவ்வகைப் பொருளையும், நிகழ் காலத்தினது பொருள் நிலைமை உடைய பொதுச் சொல்லாகிய "செய்யும்" என்னும் சொல்லாற் கிளந்து கூறுக. |
முந்நிலைக் காலத்தும் தோன்றும் இயற்கைப் பொருளாவன நாள் கோள்களின் இயக்கமும் பொருட் பண்புகளுமாம். எ-டு : ஞாயிறு இயங்கும், தீச்சுடும், மலைநிற்கும், யாறுஒழுகும் எனவரும். |