284இடையியல்

வினை  முதலிய  அறுவகைப்  பொருள்தரும்  சொற்களைப் பொருந்தி
அவற்றையே தன்பொருளாகக் கொண்டு வருமென்பார் "அவ்வறு கிளவியும்
கண்ணிய நிலைத்தே" என்றார்.
 

எ-டு : 1) மலைவான்    கொள்கென     உயர்பலிதூஉய்     எனவும்
2)  துண்ணெனத்  துடித்தது  மனம்  எனவும் 3) ஒல்லென ஒலிக்கும் கடல்
எனவும்  4) வெள்ளென   விளர்த்தது   வானம்   எனவும்  5) நிலனென
நீரெனத்   தீயென     வளியென    வானெனப்  பூதம்  ஐந்து  எனவும்
6) அழுக்காறெனவொரு பாவி எனவும் முறையே வந்தவாறு கண்டு கொள்க.
எனல் என்பதன் அடியாகப்பிறந்த 'என' என்னும் செயவென்னெச்சம் வேறு;
இவ்இடைச் சொல்வேறு என அறிக.
 

சூ. 260 :

என்றென் கிளவியும் அதனோ ரற்றே
[11]
 

க-து:

'என்று'       என்னும்         இடைச்சொற்பொருட்குறிப்பும்
அவையேஎன்கின்றது. 
 

உரை : 'என்று'  எனப்படும்   இடைச்சொல்லும்   மேற்கூறிய   'என'
என்பதன் பொருளொடு ஒருங்கு ஒத்ததேயாகும்.
 

எ-டு : 'நரைவரும்  என்றெண்ணி'  என்பது வினைப்பொருண்மைபற்றி
வந்தது. விண்ணென்று   விசைத்ததுவான்  என்பது  குறிப்புப்பொருண்மை.
ஒல்லென்றொலிக்கும்   ஒலி   புனலூரன்   என்பது இசைப் பொருண்மை.
பச்சென்று   பசந்தது  பயிர்  என்பது  பண்புப்பொருண்மை.    நீரென்று
தீயென்று ...ஐந்து-என்பது எண்ணுதற்  பொருண்மை.   பாரி பாரி  என்று
ஒருவனுளன் என்பது பெயர்ப் பொருண்மை.  என்று  என்னும்  செய்தென்
எச்சம் வேறு. இவ்இடைச்சொல் வேறென அறிக.
 

சூ. 261 :

விழைவின் தில்லை தன்னிடத் தியலும்
[12]
 

க-து:

தில் என்பதற்கு எய்தியது ஒருமருங்கு விலக்குகின்றது.
 

உரை:விழைவுப்   பொருண்மை    பற்றி   வரும்   'தில்'  என்னும்
இடைச்சொல் தன்மைக்கண்  வரும்.  ஏனையிடத்து  வராது  என்றவாறாம்.
எ-டு: மேற்காட்டப்பட்டது.
 

சூ. 262 :

தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும் 

அளபின் எடுத்த இசைய என்ப

(13)
 

க-து:

ஏகார  ஓகார   இடைச்சொற்கு  ஓதிய பொருள்களுள் ஒன்றற்கு
மரபு கூறுகின்றது.