இடையியல்287

சூ. 268 :

அந்தில் ஆங்க அசைநிலை கிளவியென்று

ஆயிரண் டாகும் இயற்கைத் தென்ப 

(19)
 

க-து: 

அந்தில் என்னும் இடைச்சொல்லின் பொருண்மை கூறுகின்றது.
 

உரை:அந்தில்   என்னும்     இடைச்சொல்     ஆங்கு   என்னும்
இடக்குறிப்பும் அசைநிலையும் எனப்படும்   அவ்விரண்டு  இயல்பினதாகும்
என்று கூறுவர் புலவர். ஆங்கு என்பது  பாவோசை  கருதி  ஆங்க  என
விகாரமாய் நின்றது.
 

எ-டு : வருமே,  சேயிழை  அந்திற்  கொழுநற்  காணிய  (குறு - 293)
என்பது இடக்குறிப்பு. அந்திற் கச்சினன் கழலினன்  (அகம் - 79)  என்பது
அசைநிலை.
 

சூ. 269 :

கொல்லே ஐயம்
(20)
 

க-து :

'கொல்' என்னும் இடைச்சொற்பொருண்மை கூறுகின்றது.
 

உரை:கொல் என்னும் இடைச்சொல் ஐயப்பொருட்டாய் வரும்.
 

எ-டு : சாத்தன்  வருங்கொல்?   எனவரும்.  இவ் இடைச்சொல் குற்றி
கொல்லோ மகன்கொல்லோ எனவினா எழுத்தொடும் வரும்.
 

சூ. 270 :

எல்லே இலக்கம்
(21)
 

க-து :

'எல்' என்னும் இடைச் சொற்பொருண்மை கூறுகின்றது.
 

உரை:'எல்' என்னும் இடைச்சொல் அசைந்திலங்குதல் பொருட்டாகும்.
 

எ-டு : எல்வளை மகளிர்   (புறம்-24)   எனவரும்.  அசைதலையுடைய
வளையணிந்த மகளிர் என்பதுபொருள்.
 

இலக்கம்   என்பது   இலங்குதல்,   விளங்குதல்,  துலங்குதல் என்னும்
பண்பு குறியாது,  தொழிற்குறிப்புணர்த்தி  நிற்றலின்  இடைச்சொல்லாயிற்று
என்க. 'எல்' என்பது ஞாயிற்றினைக்  குறிக்குங்கால்  பெயராயும் எல்லினன்
பெரிது - எல்லிற்றுப்போது  என ஒளிர்தலைக்  குறிக்குங்கால் வினையாயும்
எல்லொளிமதியம்   எனப்   பண்பினைக்குறிக்குங்கால்   உரிச்சொல்லாயும்
நிற்கும். அசைதற்குறிப்புணர்த்தும் வழி இடைச்சொல்லா, மென்க,
 

சேனாவரையர்  இலக்கம்  என்பதற்கு  விளங்கித் தோன்றுதல் என்னும்
பண்புப் பொருள் கொண்டு உரிச்சொல் நீர்மைத்து