இடையியல்293

உரை:இரண்டு   மாத்திரை  யளவிற்றாயிசைக்கும்  மொழியிறுதியாகி
வருதலில்லாத   உயிரெழுத்தாகிய   ஒளகாரம்,    மேற்கூறிய    இடைச்
சொற்களைப்   போல   இரட்டித்து     நிற்குமிடத்தும்     அளபெடுத்து
நிற்குமிடத்தும்  அளபெடாது   தனித்து    நிற்குமிடத்தும்,   குறிப்பானும்
இசையானும் நெறிப்படத்  தோன்றுதலான்   அதன்   பொருள்வேறுபடுதல்
உளவென்று கூறுவர் புலவர்.
 

இஃது   இடைச்சொல்லாய்ப்   பொருள்  குறித்து  நிற்கும்  என்றலின்
ஆயியல் நிலையும் காலத்தானும்  என்றது  பிரிவின்றி  இணைந்து  வரும்
நிலையை மட்டுமே சுட்டிற்றென அறிக.
 

கௌ,  வௌ   என்னும்   உயிர்மெய்களை   நீக்குதற்காக  இறுதியில்
உயிரே என்றும், எகர ஒகரங்களை நீக்குதற்காக  ஈரளபிசைக்கும்  என்றும்
கூறினார்.
 

இங்ஙனம்  இவ்  ஒளகாரம்  இணைந்தும்   அளபெடுத்தும்  தனித்தும்
வருங்கால்   ஒன்றற்கொன்று    ஓசையான்     வறுபடுதலின்  'குறிப்பின்,
இசையான், நெறிப்படத் தோன்றும்' என்றார்.
 

வரலாறு: "ஒளஒள   இவன்   தவஞ்   செய்தவாறு"   என்னுமிடத்து
வியப்பும்,  ஒளஉ இவன்  போர் செய்தவாறு என்புழிச் சிறப்பும், ஒள இனி
வெகுளல் என்னுமிடத்து மாறுபாடும் குறிப்பானுணர்த்தி  நிற்குமாறு  அறிக.
பிறபொருள்  குறித்து   வருமேனும்   கண்டுகொள்க.   இவ்   ஒளகாரமே
இக்காலத்து ஓகாரமாக வழங்குகின்றதுபோலும்.
 

சூ. 283 :

நன்றீற் றேயும் அன்றீற் றேயும்

அந்தீற் றோவும் அன்னீற் றோவும்

அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்

(34)
 

க-து:

ஒருசார் குறிப்பிடைச் சொற்கள் ஆமாறு கூறுகின்றது.
 

உரை:நன்றே, அன்றே  எனவரும்  சொற்களும், அந்தோ, அன்னோ
எனவரும்   சொற்களும்   அவைபோல்வனவாய்வரும்  பிறவும்   இடைச்
சொற்களாய்க் குறிப்புப் பொருள்பற்றி வரும்.
 

அம்முதனிலைகளொடு  கூடியல்லது குறிப்புப்பொருள் தாரா என்பதறிய
நன்றீற்றேயும்   அன்றீற்றேயும்      அந்தீற்றோவும்     அன்னீற்றோவும்
எனவிதந்து   கூறினார். அதனான் இவற்றை வேறு கூறினார் என்க. இவை
தனித்தும்,   ஒரோவழி   இரட்டித்தும்  வருதலின் பிரிவிலசைநிலை கூறிய
அதிகாரத்து வைத்து ஓதினார் என்க.