318உரியியல்

சேர்தல்,    சேர்த்தல்,      வீழ்தல்,     வீழ்த்தல்,     போன்றவை
இத்தகையன.   இவை   வினைப்போலியாக   வந்த   உரிச்சொற்கள் என
அறிக.   துணையிற்றீர்ந்த     கடுங்கண்யானை     என்பது   பெயரெச்ச
வினையாதலன்றி   உரிச்சொல்லாகாமையான்   இத்தகையன  காட்டாதற்கு
ஒவ்வா என்க.
 

சூ. 320 :

கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு
(23)
 

உரை:கெடவரல்,   பண்ணை    எனவரும்   அவ்விரு   குறிப்புரிச்
சொற்களும் விளையாட்டு என்னும் பொருள் பற்றி வரும்.
 

எ-டு : "கெடவரலாயமொடு"   எனவும்     "பண்ணைத்   தோன்றிய
எண்ணான்கு  பொருளும்"   எனவும்     வரும்.     இவை   தனித்துப்
பெயர்ப்போலியாய் வரும். 'விளையாட்டு' என்றது அத்தொழிற்பண்பினைச்
சுட்டி நின்றது.
 

சூ. 321 :

தடவும் கயவும் நளியும் பெருமை 
(24)
 

உரை:தட  கய  நளி என்னும் பண்புரிச் சொற்கள் பெருமை என்னும்
பொருள்பற்றி வரும் (பெருமை - பெருக்கம்)
 

எ-டு : வலிதுஞ்சு   தடக்கை    (புறம்-394)   எனவும்     கயவாய்ப்
பெருங்கையானை   (அகம்-118)   எனவும்   நளிமலை   நாடன்   நள்ளி
(புறம்-150) எனவும் வரும்.
 

சூ. 322 :

அவற்றுள்

தடவென் கிளவி கோட்டமும் செய்யும்

(25)
 

உரை:மேற்கூறிய  மூன்றனுள்  தட வென்னும் சொல் பெருமையாகிய
பண்புணர்த்தலேயன்றி வளைவு என்னும்  பண்புணர்த்தியும்   வரும். எ-டு
: தடமருப் பெருமை (நற்-160) எனவரும்.
 

சூ. 323 : 

கயவென் கிளவி மென்மையும் செய்யும்
(26)
 

உரை:கயவென்னும்   உரிச்சொல்   பெருமையேயன்றி   மென்மைப்
பண்புணர்த்தியும் வரும். எ-டு: கயந்தலை மடப்பிடி (நற்-137) எனவரும்.
 

சூ. 324 :

நளியென் கிளவி செறிவு மாகும்
(27)
 

உரை:நளி   என்னும்   உரிச்சொல் பெருமைப்பண்பேயன்றிச் செறிவு
என்னும் குறிப்புணர்த்தியும் வரும். எ-டு : நளியிரு முந்நீர்  நாவாய்  ஓட்டி
(புறம்-66) எனவரும்.