சூ. 330 : | நம்பும் மேவும் நசையா கும்மே |
(33) |
உரை:நம்பு-மே என்னும் குறிப்புரிச் சொற்கள் நசை என்னும் பொருட்குரியவாய் வரும் (நசை - விருப்பம்) |
எ-டு : நயந்து நாம்விட்ட நன்மொழி நம்பி (அகம் - 198) எனவும் பேரிசை நவிரம் மேஎய் உறையும் (மலைபடு - 72) எனவும் வரும். இவை வினை எச்சத்திற்கு முதனிலையாகவன்றித் தனித்து வராமை கருதி எடுத்தோதினார் போலும். நம்பன், நம்பி என்பவை நம்பு என்பதனடியாகப் பிறந்தவையாகும். |
| சூ. 331 : | ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் |
| ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் |
(34) |
உரை:ஓய்தல் (ஓய்) ஆய்தல் (ஆய்) நிழத்தல் (நிழத்து) சாய் என்னும் குறிப்புரிச்சொல்லிடத்தவாகிய நான்கும் தாம் அடுத்து நிற்கும் சொற்பொருளின் நுணுக்கத்தை உணர்த்திவரும் (நுணுக்கம்-மெலிவுறுதல்) |
எ-டு : வேனில் உழந்த வறிதுயங்கு ஓய்களிறு (கலி - 7) எனவும், பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை (கலி - 96) எனவும், நிழத்தயானை மேய்புலம்படர (மதுரை-303) எனவும், கயலறல் எதிரக் கடும்புனல் சாஅய் (நெடுநல்-18) எனவும் வரும். [ஆய்ந்ததானை - நுணுகியதுகில்]. இவை பெரும்பான்மையும் வினைப்போலியாய்ப் பெயரடையாக வரும். |
சூ. 332 : | புலம்பே தனிமை |
(35) |
உரை:புலம்பு என்னும் குறிப்புரிச்சொல் தனிமை என்னும் பொருள் உணர்த்தி வரும், எ-டு : புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி (அகம்-7) எனவரும். இது பெயர்ப்போலியாக வரும். |
சூ. 333 : | துவன்று நிறைவாகும் |
(36) |
உரை:துவன்று என்னும் குறிப்புரிச்சொல் நிறைவு என்னும் பொருட்காகி வரும். எ-டு : ஆரியர் துவன்றிய பேரிசையிமயம் (பதிற்-11) எனவரும். இஃது வினைப்போலியாக வரும். |
சூ. 334 : | முரஞ்சல் முதிர்வே |
(37) |
உரை:முரஞ்சு என்னும் குறிப்புரிச்சொல் முதிர்தல் என்னும் பொருள் குறித்து வரும். எ-டு : கோடுபல முரஞ்சிய கோளி ஆலத்து (மலைபடு-268) என வினைப்போலியாக வரும். |