சொல்லினக் கோட்பாடுகள்15

இடைச்சொல்:
 

இடைச்சொற்கள்  பெயர் வினைகட்கு உறுப்பாயும் அவற்றைச் சார்ந்தும்
அவற்றிற்கு  அடையாயும் வரும்.  சில பெயர்ப்போலியாயும் வினைப்போலி
யாயும்  வரும். அன் ஆன்  முதலிய  இறுதி இடைச் சொற்கள், மலையன்,
சேரமான்,   உண்டனன்,   நடந்தான்    எனப்பெயருக்கும்   வினைக்கும்
பொதுவாயும்  உறுப்பாயும் வந்தன. நடந்தனன் என்பதில் அன் சாரியையாக
வந்தது.  அதன்கண்  'ந்த்'   காலஇடைநிலையாக  நின்றது.  பொன்னனை,
பொன்னனொடு என வேற்றுமை உருபாயும் கொன்னூர், வருகதில், அவனே
செய்தான் என முன்னும்பின்னும் அடையாகவும் வந்தன. மதிபோலும் முகம்,
புலியன்ன  பாய்ச்சல்  என உவம உருபுகளாக வினைப்போலியாக  வந்தன.
பிறபொருள்  பற்றி  ஆங்கு,  அங்ஙனம்  எனப்பெயர்ப்போலியாக வந்தன.
[போலி = போன்று]
 

இவற்றுள் அடையாகவும் பெயர்ப்போலி வினைப்போலியாகவும் வருவன
தனிப்பொருளுடையன.   எனினும்    அவை     பெயர்    வினைகளைச்
சார்ந்தன்றித்  தனித்து  வாரா.  பெயர்ப்போலிகள்  தனித்துவரின்  அவை பெயர்ச்சொல்லாக ஆக்கம் பெற்றனவாகும்.
 

இவ்  இடைச்சொற்கள்  ஓர்   எழுத்தாயும்  அசையாயும்  சொல்லாயும்
வடிவுற்று  நிகழும். இடைச் சொற்களை ஆசிரியர் ஏழு  வகையாகப்பிரித்து
அவற்றின் இயல்புகளைப் புலப்படுத்துகின்றார்.
 

பெயரும்  வினையும்  சொல்லாகியும்   சொற்றொடராகியும்   பொருள்
வேறுபாடுகளை   உணர்த்துதற்குத்  துணைபுரிவன  இடைச்சொற்களேயாம்.
சொற்கள் பல்வேறு  நிலையினவாகிக்  குறிப்புப்  பொருள் உணர்த்துதற்குத்
துணைபுரிவனவும்  இடைச்சொற்களே  ஆகும்.  அதனான்  'இடைச் சொல்
லெல்லாம்  வேற்றுமைச் சொல்லே" என்று விளக்குகின்றது தொல்காப்பியம்.
பிறவிளக்கங்களை  எழுத்ததிகாரப்  புணரியலுரையுள்ளும் சொல்லதிகாரத்து
வேற்றுமையியல் இடையியல் உரியியல் உரைகளுள்ளும் கண்டு கொள்க.
 

உரிச்சொல்:
 

குறைச்சொற்களாகிய     வேர்ச்சொற்கள்     நிரம்பிப்   பெயராகவும்
வினையாகவும்  ஆக்கமுறாமல்  பெயர்ப்போலியாயும் வினைப்போலியாயும்
உருப்பெற்றுப் பெயர்வினைகட்கு  அடையாயும் தனித்தும் வரும். விரிவான
விளக்கத்தை உரியியல் உரையுட்கண்டு கொள்க.