இனி முருகன், இந்திரன், நாராயணன், மாரி, காளி என்றாற் போல வரும் தெய்வப்பெயர்கள் தெய்வஞ்சுட்டாமல் மக்களுக்கும் அஃறிணைப் பொருள்கட்கும் இடுபெயராக வைக்கப்பட்டு வருமிடத்து இருதிணைப்பொதுப் பெயராகவும் தெய்வஞ்சுட்டியவழி உயர்திணை மருங்காயும் இசைக்கும் எனக்கொள்க. |
இங்ஙனமன்றித் திருமால், பரமசிவம், பெருமாள், இலக்குமி எனப் பெயர்நிலையான் பால் பிரிந்திசையாவழிப் பயனிலை முடிபான் பாலுணரப்படுமென அறிக. இவ்வகைப் பெயர்கள் தெய்வஞ்சுட்டிய வழி உயர்திணை மருங்காகவும் மக்களைச்சுட்டிய வழி உயர்திணைப் பெயராகவும் இடுபெயராயவழி விரவுத்திணையாகவும் நிற்கும். அவ்வழித், திணை வேறுபாடு பயனிலைவகையான் உணரப்படும். எனவே, இருதிணைக்கண்ணும் பெயர்நிலைக்கிளவிகளில் பால் பாகுபாடு பொருட்டன்மையை அடிப்படையாகக் கொண்டதென்பது புலப்படும். |
இனி, உரையாசிரியர் ஆண்மைதிரிந்து பெண்மை சுட்டிய பெயரைப் பேடி என்றாற்போலப் பெண்மை திரிந்து ஆண்மை சுட்டிய பெயரைப் பேடன் எனக்கூறலாமென்று கருதிப் பேடன் வந்தான் என உதாரணம் காட்டினார். இதனை ஒக்கும் எனக் கருதுவாரும் உளர். அது பொருந்தாது. என்னை? |
ஆண்மை பெண்மை என்பவை உடம்பொடு கூடிய உயிர்த்தன்மையாகும். ஆண், பெண் என்பவை உடல்வடிவாகும். ஆண் வடிவத்தில் ஆண்மையும் பெண் வடிவத்திற் பெண்மையும் இருத்தல்வேண்டும். இதற்குமாறாக ஒன்றனுள் ஒன்று சிறிதும் பெரிதுமாகக் கலந்திருத்தலும் இயற்கையாக உளது. இக்கலப்பு வெளிப்படையாக விளங்கும் அளவில் திரிபுபட்டு நிற்பின் செயல்முறைப் பண்புகள் மாறிவிடும். பாலில் நீரைக்கலந்தாலும் நீரிற்பாலைக்கலந்தாலும் அவை திரிபேயாம். அதுபோலப் பெண்மை ஆண்மையைத் திரித்ததாயினும் ஆண்மை பெண்மையைத் திரித்த தாயினும் அத்திரிபுடையது முழுமையான ஆடூஉவாகவோ மகடூஉவாகவோ நில்லாமையின் அதனை யாதானும் ஒரு பாலில் அடக்குதல்வேண்டும். திரிபினால் எய்தும் வேறுபாட்டினை நன்குணர்ந்த தொல்லாசிரியன்மார் அதனை மகடூஉவின்கண் அடக்கினார். |
மிகுதிபற்றி அடக்குவது ஆசிரியர் கருத்தாயின் உயர்திணை மருங்கின் பால் பிரிந்திசைக்கும் என்பதும், 'ஆண்மை யறிசொற் காகிட னின்றே' என்பதும் பயனில் கூற்றாம். நன்னூலாரைப் |