36கிளவியாக்கம்

ளஃகான்  ஒற்றென்பது   அள்,  ஆள்   என்னும்  இடைச்சொற்களை
உணர்த்திநின்றது. மேற் சூத்திரத்துள் கூறிய விளக்கங்களுள்  பொருந்துவன
இதற்கும் கொள்க.
 

எ-டு :

உண்டனள், உண்கின்றனள், உண்பள் எனவும்

உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள்எனவும்

கரியள், செய்யள், கரியாள், செய்யாள்எனவும் வரும்.

 

ஆண்டாள்   இவள்,    மலையாள்  வந்தாள்  எனச் சிறப்புப்பெயரொடும்
வினையொடும் கூடிப் பெயர்க்கண் வருதலும் கொள்க.
   

இனிக், கண்ணி, பொன்னி, தோழி, செவிலி, தலைவி  எனப்  பெண்பாற்
பெயர்கள்   பெரும்பான்மையும்   இகரஈறாகவரும்.   வருமேனும்  அவை
இருதிணைக்கும்  ஏற்ப  விரவுப்பெயராய்  நிற்றலானும்  தொழிற் சொற்கள்
இகரஈற்றான்   மகடூஉவறிசொல்லாக  ஆக்கம்  பெறாமையானும்  ளஃகான்
ஒற்றே என ளகரத்தையே கூறினார் என்க.
   

சூ. 7 :

ரஃகான் ஒற்றும் பகர இறுதியும்

மாரைக் கிளவி உளப்பட மூன்றும்

நேரத் தோன்றும் பலரறி சொல்லே
[7]
 

க-து:

பல்லோரறியும் சொல் ஆமாறு கூறுகின்றது. 
 

உரை: ரகர  ஒற்றாகிய  இறுதியும்,  பகர  உயிர்மெய்யாகிய இறுதியும்,
மார்  என்னும்   இடைச்சொல்லிறுதி  உட்பட    அம்மூன்றும்    பலரறி
சொல்லாதற்கு ஒப்பத்தோன்றி இசைக்கும்.
   

ரஃகான்    ஒற்றென்பது   அர்,   ஆர்  என்னும்  இடைச்சொற்களை
உணர்த்திநின்றது. பகரம் என்றது ஈண்டு  உயிர்மெய்யெழுத்தினை.  அஃது
பல்லோரறியும் சொல்லுணர்த்தும் ஈறாயவழி இடைச் சொல்லாம்.
   

ரகர  ஈறு   மூன்று   காலமும்  வினைக்குறிப்பும்   பற்றிவரும். பகரம்
எதிர்காலம் பற்றி மட்டுமே வரும். மார்  எதிர்காலம்  பற்றி  வரும். மாரீறு
வினையொடும் முடியும். அதனால் அம்முறையான்  நின்றன.  இவ்வேறுபாடு
டையவேனும்   பலரறிசொல்லை  உண்டாக்குதற்கு  இவை  ஒத்த  உரிமை
உடையன என்பது விளங்க 'நேரத்தோன்றும்' என்றார், நேர்தல்-ஒத்தல்.