கிளவியாக்கம்37

எ-டு :

உண்டனர், உண்ணாநின்றனர், உண்குவர்எனவும்

உண்டார், உண்ணாநின்றார், உண்ணுவார்எனவும்

கரியர், கரியார்எனவும்

கூறுப, வருப, காண்ப, என்பஎனவும்

காண்மார் (அவர்). கொண்மார் (வந்தார்)எனவும் வரும்.

 

இவை   வினைமுற்றுக்கள்.   இவை   பெயர்ச்  சொல்லாக்கத்தின்கண்
சேரர், சோழர், பாண்டியர், மன்னர், வேந்தர், பாணர்,  கூத்தர்,  விறலியர்,
அறிவர்,   கண்டோர்   எனவும்  தாய்மார்,  தந்தைமார்,  அண்ணன்மார்,
ஆசிரியன்மார், நம்பிமார், நங்கைமார் எனவும் வரும்.
   

பகர உயிர்மெய் பெயர்க்கண் ஆக்கம் பெறுதலில்லை. மாரைக்கிளவியை
ரகர ஈற்றுள் அடக்காமைக்குக்  காரணம்,  ரகர  ஈற்றுள் அடக்கின் மகரம்
காலம்  காட்டும்  எழுத்தாகக்  கொள்ள  வேண்டும், கொள்ளின் தாய்மார்,
தந்தைமார்   என்னும்  பெயர்கள் காலமுணர்த்துவனவாக  மாறுகொள்ளும்.
மற்றும்  எச்சமாகத்  திரியாமல்  நின்று வினையொடு முடிதல் ஆர்ஈற்றுக்கு
ஒவ்வாதாகலின் என்க.
   

உரையாசிரியன்மார்   யாவரும்   உயிர்மெய்யை  இரண்டெழுத்தாகவே
கொண்டனராதலின் அதற்கேற்ப விளக்கங்கூறியுள்ளனர்.   'நேரத்தோன்றும்'
என்பதனை இனஞ்சுட்டும்  அடையாகக்  கொண்டு  நேரத்தோன்றாதனவும்
உள என்று விளக்கங்கூறுவர். அவை எல்லாம்  நூல்நெறிக்கு ஒவ்வாமையை
ஓர்ந்து கொள்க.
   

சூ. 8 :

ஒன்றறி கிளவி தறட ஊர்ந்த

குன்றிய லுகரத் திறுதி யாகும்
[8]
 

க-து :

அஃறிணையுள் ஒன்றறி சொல் ஆமாறு கூறுகின்றது. 
 

உரை :ஒன்றனை   அறிவிக்கும்  சொல்  தறட  என்னும்   மெய்களை
ஊர்ந்துநின்ற குற்றியலுகரத்திறுதியாகும்.
   

ஆகும் என்றது ஆகி இசைக்கும் என்றவாறு.
   

எ-டு :

உண்டது, உண்ணாநின்றது, உண்பதுஎனவும், கரியது

எனவும், கூயிற்று, தாயிற்றுஎனவும், கோடின்று, குளம்பின்று

எனவும், குண்டுகட்டு, குறுந்தாட்டுஎனவும் வரும்.

 

துவ்வீறு   மூன்று   காலமும்   வினைக்.குறிப்பும் பற்றிவரும். றுவ்வீறு
இறந்தகாலமும் வினைக்குறிப்பும்  பற்றிவரும்.  டுவ்வீறு  வினைக்குறிப்பாக
மட்டுமே  வரும்.  அதனான்  குற்றியலுகரமென   ஒன்றாக்காமல்    தறட
ஒற்றுக்களை விதந்து ஓதினார். வைப்பு முறையும் அதனானே விளங்கும்.