உரை:அல்லதில் எனச் செப்புவோன் பிறிதாகிய பொருளொடு கூறாமல் வினாவப்பட்ட பொருட்கண் வைத்து அவ்வாய்பாட்டாற் கூறலுறின் சுட்டிக்கூறுக. |
எ-டு:பயறுளவோ? என்று வினாவியவழிப் பசும்பயறல்லதில், பெரும் பயறல்லதில்-கலம்பத்துவிற்கும் பயறலல்லதில் என அப்பொருட்டன்மையைச் சுட்டிக்கூறுக என்றவாறு. சுட்டுதல்-கருதுதல். "சுட்டிக்கூறல்" எனப் பொதுப்படக் கூறியவதனான் முற்கிடந்ததனைக் காட்டி இப்பயறல்லதில் எனக்கூறினும், இது வல்லதில் எனக்கூறினும் ஒக்குமென்க. |
| சூ. 37: | பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் |
| பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே |
(37) |
க-து: | சுட்டுப்பெயராற்கூறுதல் வழாநிலையேயாம் என்கின்றது. |
| |
உரை:வரையறைபெறப் பொருளொடு புணர்ந்துவரும் சுட்டல்லாமல் பொருளொடு புணராத சுட்டுப்பெயராயினும் செப்பினாற்கூறும் வழிப் பொருள் வேறுபடாது பொருந்தி நிற்கும். |
பொருளொடு புணர்ந்த சுட்டாவன: அப்பொருள், அவ்வீடு, இப்பொருள், இவ்வீடு, இம்மலர், இப்பயறு என வருவன. பொருளொடு புணராச்சுட்டாவன அது இது அவை இவை எனப் பொதுவாய் வருவன. |
"இதுவல்லதில்" எனச் செப்பியவழி அச்சுட்டுப்பெயர் முன் கிடந்த பொருளைக் கண்கூடாகச் சுட்டி நிற்றலின் வினாவியோன் தெற்றென உணருமாதலின் வேறுபடாது ஒன்றாகும் என்றார். சுட்டுப் பெயரான் விடைகூறுதல் வினாயபொருட்கும் பிறிது பொருட்கும் ஒக்கும் என்க. அதனால் இம்மரபை எடுத்துக் கூறினார். |
இனி, வேறுபடாது என்றொழியாது "ஒன்றாகும்" என விதந்து கூறியவதனான். முன்கிடந்த பொருளேயன்றி அப்பொருட் கூறுகளையும், அடையாளங்களையும் சுட்டிக்கூறினும் அமையுமெனக் கொள்க. |