சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

110

னகர ஈறு அண்மை விளியில் அகரமாதல்
 

134.

அண்மைச் சொல்லிற் ககரம் ஆகும்.
 

என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதிவகுத்தல் நுதலிற்று.

(இ - ள்.) அவற்றுள்    அன்    ஈறு    அணியாரை   விளிக்குஞ்
சொல்லிடத்து அகரமாகும், (எ - று.)

(எ - டு.)சோழன் - சோழ, சேர்ப்பன் - சேர்ப்ப எனவரும்.   (14)

ஆனென் இறுதி விளி யேற்குமாறு
 

135.

ஆனென் இறுதி இயற்கை யாகும்
 

என் - எனின், னகர ஈற்றுள் ஒருசாரன விளி ஏற்குமாறு நுதலிற்று.

(இ - ள்.) ஆன்   என்னும்   னகர   இறுதிப்  பெயர்  இயல்பாய்
விளியேற்கும், (எ - று.)

(எ - டு.)சேரமான், மலையமான் எனவரும்.                 (15)

எய்தியது விலக்கிப் பிறிது விதி வருத்தல்
 

136.

தொழிலிற் கூறும் ஆனென் இறுதி
ஆயா கும்மே விளிவயி னான.
 

என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.

(இ - ள்.) ஒருவன்  செய்யும்  தொழில்  ஏதுவாகக்   கூறப்படுகின்ற
ஆன் என்னிறுதிப்பெயர் விளியேற்கு மிடத்து ஆயாகும், (எ - று.)

(எ - டு.)உண்டான் - உண்டாய். நின்றான் - நின்றாய் எனவரும்.(16)

இதுவுமது
 

137.

பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே.
 

என்  -  எனின், இதுவும்  எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்
நுதலிற்று.

(இ - ள்.) அவற்றுள்  பண்பு  தனக்குப் பொருண்மையாக் கொண்ட
பெயரும் மேற்கூறிய தொழிற்பெயரோடு ஒருதன்மைத்து, (எ - று.)

(எ - டு.) கரியான் - கரியாய், செய்யான் - செய்யாய் எனவரும்: (17)