சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

144

காலத்தின் பெயரும் முறையும் தொகையும்
 
  

203.இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும்
மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே.

 

என் - எனின்,  மேல்  தொகை  கூறப்பட்ட  காலத்திற்குப் பெயரும்
முறையும்  தொகையும்  கூறி  அதுதான்  வினைக்குறிப்பிற்கும்  வினைச்
சொற்கும் உண்டு என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று.  

(இ - ள்.)   இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்று சொல்லப் படுகின்ற
அம்முக்காலமும்    வினைக்குறிப்பொடும்   கொள்ளப்படும்   உண்மை
நிலையினையுடைய அவை தோன்றுமிடத்து, (எ - று.)  

இறப்பு  நிகழ்வு  எதிர்வு  என்பன பெயர் முறை கிடந்த  முறையே.

(எ - டு.)  கரியன்  செய்யன்  என்பன.  இவை  ஆசிரியற்கே கால்
புலப்பட  நின்றமையின்  மேலைச்  சூத்திரத்து அடங்காது என்று வேறு
கூறப்பட்டது என்பது.  

மெய்ந்நிலை     என்பது  வினைக்குறிப்புக்  காலத்தைத்  தெற்றென
விளக்கிக்  காட்டாமையான்  வினையல்ல  என்று  கருதினும்   கருதற்க;
இதுவும் வினையது இலக்கணம் மெய்ம்மையாக உடையது, எ - று.   (3)

வினைச்சொற்களின் பாகுபாடு
 

204.குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக்
காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம்
உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் 
அம்மூ வுருவின தோன்ற லாறே.

 

என் - எனின், வினைச்சொற்களது  பாகுபாடு  கூறுதல்   நுதலிற்று.

(இ - ள்.)  குறிப்பு  வினைத்  தன்மையானும்,  தெரிநிலை வினைத்
தன்மையானும்,  முறைமைப்படத்   தோன்றிக்  காலத்தொடு  வருகின்ற
வினைச்சொற்கள்  எல்லாம்  உயர்திணைக்கு உரியனவும் அஃறிணைக்கு
உரியனவும்   அவ்விரு   திணைக்கும்   ஒன்று   போன்ற    உரிமை
உடையனவும்  என  அம் மூன்று கூற்றை உடைய தோன்று நெறிக்கண்,
(எ - று.)  

மேல் ‘குறிப்பொடுங்கொள்ளும்’   (சொல்   -203)   எனக்  குறிப்பு
இயைபுபற்றி நிற்றலிற் குறிப்பு முன் கூறப்பட்டது.