(எ - டு.) உண்கு வந்தேன் என்பது. இனி ஒன்றென முடித்தல் என்பதனான் உண்கும் என்பதும் இவ்வாறே வினையோடு முடியும். (எ - டு.) உண்கும் வந்தோம் என்பது. வினையெச்ச முற்றாய் அமையாதோஎனின், முன்முற்றாய்ப் பெயர் கொண்டு நின்று, பின் வினையெச்ச முற்றாய் வந்தன அன்மையின், இவ்வாறு ஒதினார். உண்கோ யான் என்னப் பெயரோடு முடிந்ததால் எனின், அவ்வாறு வருவன உளவேனும் சிறுபான்மை; வினைகோடலே பெரும்பான்மை என உணர்க. (7) உயர்திணைப் படர்க்கை ஒருமை வினைமுற்று |
என் - எனின், உயர்திணைத் தன்மை வினை உணர்த்தி அத்திணைப் படர்க்கை வினை உணர்த்துவான் எடுத்துக் கொண்டார் என்பது. அப் படர்க்கை வினைதான் ஒருமை வினையும் பன்மை வினையும் என இரு வகைத்து. அவற்றுள் ஒருமை வினை தான் ஆண்பால் ஒருமையும் பெண்பால் ஒருமையும் என இரு வகைத்து. அவ்விருவகை ஒருமையும் இதனாற் கூறுகின்றது என உணர்க. (இ - ள்.) அன், ஆன், அள், ஆள் என்று சொல்லப்பட்ட நான்கு ஈற்றுச் சொல்லும், ஒருவன் ஒருத்தி என்னும் ஒருமைப் பாலிடத்தில் படர்க்கையை உணர்த்தும் சொல்லாம், (எ - று.) முக்காலத்தும் உடன்பாடும் மறையும் என இரு வகையாய் வரும். அவற்றுள் அன்; உண்டனன், உண்டிலன்; உண்ணாநின்றனன், உண்கின்றனன்; உண்ணாநின்றிலன், உண்கின்றிலன்; உண்பன், உண்குவன் உண்ணலன் எனவரும். இனி ஆன்; உண்டான், உண்டிலான்; உண்ணாநின்றான், உண்கின்றான்; உண்ணா நின்றிலான், உண்கின்றிலான்; உண்பான், உண்குவான், உண்ணான் என வரும். இவை ஆண்பால் ஒருமை. இனி அள்; உண்டனள், உண்டிலள்; உண்ணாநின்றனள், உண்கின்றனள், உண்ணாநின்றிலள், உண்கின்றிலள்; உண்பள், உண்குவள், உண்ணலள் என வரும். |