சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

8

என் - எனின்  மேல்   அஃறிணையென்றார்;  அதனை  இனைத்துப்
பால்படுமென்று, அது படும் பால்விரித்தல் நுதலிற்று.

(இ - ள்) ஒன்றனை   யறியுஞ்   சொல்லும்,   பலவற்றை  யறியுஞ்
சொல்லுமென்று             சொல்லப்பட்ட            அவ்விரண்டு
பாலினையுமுணர்த்துஞ்சொல் அஃறிணையன (எ - று.)

இதனாற்  சொல்லியது மேற்கூறிநின்ற  அஃறிணைப் பொருளினையும்,
அஃறிணைச்   சொல்லினையும்    விரிவகையான்    ஒருமை   பன்மை
யெனவும், ஒருமைச்சொல் பன்மைச்சொல்  எனவும்  இரண்டு  கூறுபடும்
என்பதூஉம் கூறியவாறாயிற்று.                                (3)

பேடியும் தெய்வமும் உயர்திணைக்கண் அடங்கும் எனல்
 

4.

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின
ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்

தெய்வஞ் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்
இவ்வென வறியும் அந்தந் தமக்கிலவே
உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்.
 

என் - எனின்     ஐயமறுத்தலை       நுதலிற்று;       என்னை?
மேற்றொகையுள்,  ஒழிந்த,  தேவரும்,  நரகரும்,  மன்பதையு  ளொழிந்த
பேடியும்  எவ்வாறாங் கொல் என்று ஐயுற்றற்கு  அவையும்  இவ்வாறாம்
என்கின்றமையின்.

(இ - ள்.) உயர்திணையிடத்துப்  பெண்மைத்   தன்மையை  யெய்த
வேண்டி,  ஆண்மைத்  தன்மையி னீங்கிய  பேடியென்னும்  பொருளும்,
தெய்வத்  தன்மையைக்  கருதின  தெய்வமென்னும்  பொருளும்  இவை
யிரண்டும்,    இவையெனத்    தம்மை     வேறு    பாலறி   விக்கும்
ஈற்றெழுத்தினையுடைய   சொற்களை   யுடையவல்ல;    மேற்   கூறிய
மக்களென்னும்    உயர்திணையிடத்து   முப்பாலினையும்   உணர்த்துஞ்
சொற்கள் அவ்விடத்தினின்று நீங்கி வந்து தம்மை யுணர்த்தும் (எ - று.)

(எ - டு.) பேடி  வந்தாள்,  பேடியர் வந்தார், வாசுதேவன் வந்தான்,
திருவினாள்   வந்தாள்,    முப்பத்துமூவரும்  வந்தார்,   சந்திராதித்தர்
வந்தார் எனினும் அமையும்.

அந்தந்  தமக்கிலவே என்றதனான், மக்களும் தேவருமல்லாத நிரயப்
பாலரும்  மக்களை யுணர்த்தும் முப்பாற்  சொல்லானுஞ்  சொல்லப்படுவ
ரென்பது கொள்க.

(எ - டு.) நரகன் வந்தான், நரகி வந்தாள், நரகர் வந்தார் எனவரும்.