160

தெய்.

இஃது ஆசிரியன்கட்  கிடந்ததோர்  இயல்புணர்த்துதல்  நுதலிற்று.

இ-ள் : பொருட்குப் பொருள்  வினவிய  மாணாக்கன்  அவ்வாறு
வினவானாம்;     அவன்    கொள்ளுமாறு    ஆசிரியன்    அஃது
உணர்த்தவல்லனாயின், எ-று.

என்றது, ஈண்டுப் பயின்றனவாக  எடுத்தோதப்பட்ட  சொற்களைப்
பயிலாதாற்கு    அவன்    பயின்ற    வாய்பாட்டான்   உணர்த்துக;
உணர்த்தவே, பொருட்குப் பொருள் ஆராய்தலில்லை என்றவாறு.

அஃதேல், உறு தவ நனி யென வரூஉ-ம் மூன்றும்மிகுதி  செய்யும்
பொருள என்ப’ (உரி. 3) என்பதனாற் பயனின்றாம். அஃதறியாதாற்குப்
பிற  வாய்பாட்டாற்  பொருளுணர்த்த வேண்டுதலின் எனின், அதற்கு
விடை வருகின்ற சூத்திரத்தான் விளங்கும்.

நச்.

இதுவும் அது.

இ-ள் : உணர்த்த வல்லின் பொருட்குத் திரிபு இல்லைமாணாக்கன்
உணருமாறு  அறிந்து  ஆசிரியன்  உணர்த்த வல்லனாயின், இச்சொல்
இப்பொருட்கு என்று தான் கூறிய பொருட்குத் திரிபு இன்றாம், எ-று.

‘யாம்’   என்பது படர்க்கை உளப்பாட்டுத் தன்மைப்பன்மைப்பெயர்’
என்றால் உணராதானை, ‘ அது சேய்மைக்கண் நின்றாரைத் தன்னோடு
கூட்டிக்  கூறப்பட்டுப்  புடைபெயர்ச்சியின்றி  நின்றதோர்  பொருளை
உணர்த்திற்றுக்    காண்’   எனத்   தொடர்   மொழி   கூறியானும்,
சேய்மைக்கண்   நின்றாரைச்   சேர்த்துக்   காட்டியானும்   பொருள்
உணர்த்துக.

‘உண்டேம்’     என்பது பன்மைத் தன்மை’ என்றால்    பொருள்
உணராதானை,  ‘இது யானும் இவனும் அவனும் உண்டல் தொழிலைச்
செய்தேம்    என்னும்    பொருள்    உணர்த்திற்றுக்காண்’   எனத்
தொடர்மொழி  கூறியானும்,  அவரைத் தன்னோடு சேர்த்துத் தொழில்
நிகழ்த்திக் காட்டியானும் பொருள் உணர்த்துக.

‘சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே’ (புறம். 235)

என்புழி மன்னைச் சொல், ‘இனி அது கழிந்தது’ என்னும்  பொருள்
குறித்து  நின்றது  காண்  என்றால் பொருள் உணராதானை அரிதாகப்
பெற்ற கள்ளை எக்காலமும் தமக்குத்