நச். இஃது உரிச்சொற்கு எழுத்துப் பிரிந்து இசைத்தல் இன்று என்கின்றது. இ-ள் :எழுத்துப் பிரிந்து இசைத்தல் இவண் இயல்பு இன்றுஎழுத்துக்கள் முதல் நிலையும் இறுதி நிலையுமாகப் பிரிந்து வேறு வேறு பொருள் உணர்த்தல் உரிச் சொல்லிடத்து இயல்பு உடைத்தன்று, எ-று. எனவே எழுத்துக்கள் திரிந்து பொருள் உணர்த்துதல் உரிச்சொல்லிடத்து இயல்புடைத்து என்றவாறாம். எழுத்துக்கள் பிரிந்திசைத்தன வினைச் சொல்லும் ஒட்டுப் பெயரும் அவற்றுள் வினை பிரிந்தன வினையியலுள் ஈறு பற்றி ஓதிப் பிரித்துக் காட்டினார்; பெயர் பிரிந்தன. ‘நம்மூர்ந்துறு வருஉ-ம் இகர ஐகாரமும்’ (பெய. 9) என்பன முதலியவற்றாற் காட்டினார். வெற்பன், பொருப்பன் என்பன முதனிலை பிரிப்பப் பிரியுமேனும், அவையும் ஒட்டுப் பெயர் என்றுணர்க. தாமாகப் பொருளுணர்த்தாமையின் பிரிதலும் பிரியாமையும் இடைச் சொற்கு இன்று. இனி, உரிச்சொல் எழுத்துத் திரிந்து இசைத்தன எல்லாம் இவ்வோத்தினுள் காட்டிப் போந்தவற்றான் உணர்க. வெள். இஃது உரிச்சொற் குரியதோர் இயல்பு கூறுகின்றது. இ-ள் : எழுத்துக்கள் முதனிலையும் இறுதி நிலையுமாகப் பிரிந்து வேறு வேறு பொருளுணர்த்துதல் உரிச்சொல்லாகிய இவ்விடத்து இயல்புடைத்தன்று, எ-று. முதல் நிலையும் இறுதி நிலையுமாக எழுத்துப் பிரிந்திசைத்தல் உரிச்சொல்லாகிய இவ்விடத்து இல்லை எனவே, வினையும் பெயருமாகிய பிறவிடத்து இயல்புடைத்து என்பதாம். அங்ஙனம் முதல் நிலையும் இறுதி நிலையும் எனப் பிரிந்திசைப்பின் வினைச் சொல்லும் ஒட்டுப் பெயருமாம். அவற்றுள் வினையிற் பிரிந்திசைப்பன வினையியலுள் ஈறுபற்றி ஓதிப் பிரித்துக் காட்டினார். பெயரிற் பிரிந்திசைப்பன ‘நம் மூர்ந்து வரூஉ-ம் இகர ஐகாரமும்’ என்பன முதலியவற்றாற் காட்டினார். வெற்பன், பொருப்பன் எனவரும் ஒட்டுப் பெயர்கள் வெற்பு + அன், பொருப்பு + அன் என முதல் நிலையும் இறுதி நிலையுமாகப் பிரிந்திசைத்தமை காண்க. |