‘பொருட் குறை கூட்ட வியன்ற மருங்கின் இனைத்தென வறியும் வரம்பு தமக்கின்மையின்’ என்பது, பொருளொடு புணர்த்துணர்த்த இசை குறிப்புப் பண்பு பற்றித் தாமியன்ற நிலத்து இத்துணையென வரையறுத்துணருமெல்லை தமக்கின்மையான் எஞ்சாமைக் கிளத்தலரிதாகலின், எ-று. ‘வழிநனி கடைப்பிடித் தோம்படையாணையிற் கிளந்தவற்றியலாற் பாங்குறவுணர்தல்’ என்பது, ‘இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப், பெயரினும் வினையினும் மெய் தடுமாறி’ (உரி ) எனவும், ‘முன்னும் பின்னும் வருபவை நாடி’ (உரி. ) எனவும் கூறிய நெறியைச் சோராமற் கடைப்பிடித்து ‘எச் சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்)’ (உரி. ) எனவும், ‘ஒத்த மொழியாற் புணர்த்தனருணர்த்தல், தத்த மரபிற் றோன்றுமன் பொருளே’ (உரி. 93) எனவும், என்னாற்றரப்பட்ட பாதுகாவலாணையிற் கிளந்த வற்றியல்பொடு மரீஇயவற்றை முறைப்படவுணர்க, எ-று. குறிப்புப் பொருண்மை பல வகைத்தாகலானும், பெயரினும் வினையினும் மெய் தடுமாறியும் தடுமாறாதும் ஒரு சொல் பல பொருட் குரித்தாயும் வருதலானும், ஈறு பற்றித் தொகுத்துணர்த்தற்கு அன்னவீறு உடைய அன்மையானும், ‘பன்முறை யானும் பரந்தன வரூஉ-ம்’ என்றார். பொருளைச் சொல் இன்றியமையாமையின் அதனைக் ‘குறை’ என்றார். ஒருவன் வினையும் பயனும் இன்றியமையாமையின் ‘வினைக்குறை தீர்ந்தாரிற்றீர்ந்தன்றுலகு’ (குறள் 612), ‘பயக்குறை யில்லைத் தாம் வாழுநாளே’ (புறம் 188) என்றாற் போல, ‘பொருட்குறை கூட்ட வரம்பு தமக்கின்மையின்’ என இயையும். இருமை என்பது கருமையும் பெருமையுமாகிய பண்புணர்த்தும், சேண் என்பது சேய்மையாகிய குறிப்புணர்த்தும். தொன்மை என்பது பழமையாகிய குறிப்புணர்த்தும். இவையெல்லாம் ‘அன்ன பிறவும் கிளந்தவல்ல’ என்பதனாற் கொள்க. பிறவும் அன்ன. உரியியல் முற்றிற்று. தெய். இஃது உரிச்சொற்கெல்லாம் புறனடையுணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :அன்ன பிறவும்.... எல்லாம் என்பது ஈண்டு எடுத்து ஓதப்பட்டனவல்லாத அத்தன்மைய பிறவுமாகிய பல்லாற்றானும் பரந்து வரும் உரிச் சொல் எல்லாம், எ-று. |